ஜோகூர் பாரு,
கோத்தா திங்கி, ஜாலான் சுங்கை ரெங்கிட் சாலையின் கிலோமீட்டர் 60.5-ல் இன்று அதிகாலை மூன்று வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டிகள் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்கள் 18 மற்றும் 19 வயதுடையவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலை பகுதியில் கடுமையான காயம் ஏற்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என கோத்தா திங்கி மாவட்ட காவல்துறை தலைவர் யூசுப் ஒத்மான் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விபத்து குறித்து காவல்துறைக்கு இன்று அதிகாலை 1.24 மணிக்கு தகவல் கிடைத்ததாக அவர் கூறினார். யமஹா Y15ZR வகை மோட்டார் சைக்கிள்கள் இரண்டும், ஒரு லோரியின் பின்பக்கத்தில் மோதியதால் விபத்து நிகழ்ந்திருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணையில் தெரிகிறது என்றார் அவர்.
உயிரிழந்தவர்களின் உடல்கள் கோத்தா திங்கி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. லோரி டிரைவர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த விபத்தைக் கண்டவர்களும், தகவல் தெரிந்தோரும், கோத்தா திங்கி, போக்குவரத்து விசாரணை அதிகாரி இன்ஸ்பெக்டர் மொஹ்த் ஃபைருஸ் அப்துல் மாலிக் (012-7415886) என்பவரை தொடர்புகொள்ளுமாறு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.




