Last Updated:
கர்நாடகா மாநிலத்தில் தாயின் மரணம் மற்றும் தந்தையின் பிரிவு காரணமாக 10 வயது சிறுவனும், 3 வயது குழந்தையும் அனாதையாக நிற்கும் காட்சி, காண்போரை கலங்கடிப்பதாக இருந்தது.
கர்நாடக மாநிலத்தில் இரு குழந்தைகளின் தாயான பெண்ணை, அவரது காதலனே கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமணத்தை மீறிய உறவு கொலையில் முடிந்த சம்பவத்தின் பின்னணி என்ன?
கர்நாடக மாநிலம் சிக்கபள்ளாபுரா நகரைச் சேர்ந்தவர் தேஜஸ்வினி. திருமணமான இவர், தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரைப் பிரிந்து, இரண்டு குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார். ஒரு தனியார் உணவகத்தில் பணியாற்றி வந்தபோது, இவருக்கும் சந்தீப் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பழக்கம் நாளடைவில் காதலாக மாற, கடந்த ஒரு மாதமாக இருவரும் இணைந்து வாழ்ந்து வந்தனர்.
சம்பவத்தன்று, தேஜஸ்வினியின் தோழி அருணா என்பவரது வீட்டில் தங்கியிருந்தபோது, தேஜஸ்வினியும், சந்தீப்பும் மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. அப்போது அவர்களுக்குள் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் வாக்குவாதம் முற்றி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ள ஆரம்பித்தனர். ஆத்திரமடைந்த தேஜஸ்வினி தனது காதலன் சந்தீப்பைத் தாக்கியுள்ளார்.
இதனால் ஆவேசமடைந்த சந்தீப், கையில் வைத்திருந்த கத்தியால் தேஜஸ்வினியின் வயிற்றிலேயே சரமாரியாகக் குத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடி இருக்கிறார். ரத்த வெள்ளத்தில் சரிந்த தேஜஸ்வினியை, அவரது உறவினர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தையல் போடப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் வீடு திரும்பிய தேஜஸ்வினி, மருத்துவர்கள் கொடுத்த மருந்துகளை உட்கொள்ளாமல் மீண்டும் மது அருந்தியதாகத் தெரிகிறது.
இதனால் காயம் தீவிரமடைந்து, உடல் உறுப்புகள் செயலிழந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து கொலை வழக்குப் பதிவு செய்த சிக்கபள்ளாபுரா போலீசார் தலைமறைவாக இருந்த காதலன் சந்தீப்பை கைது செய்தனர். விசாரணையில், “தேஜஸ்வினி அடிக்கடி பணம் மற்றும் மது கேட்டுத் துன்புறுத்தியதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் இந்த அசம்பாவிதம் நடந்துவிட்டதாக” வாக்குமூலம் அளித்துள்ளார்.
தாயின் மரணம் மற்றும் தந்தையின் பிரிவு காரணமாக 10 வயது சிறுவனும், 3 வயது குழந்தையும் அனாதையாக நிற்கும் காட்சி, காண்போரை கலங்கடிப்பதாக இருந்தது.
Bangalore,Karnataka


