Last Updated:
டெல்லியில் அரசுப் பேருந்து மோதிய விபத்தில் ஸ்கூட்டரில் சென்ற இளைஞர் உட்பட இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
டெல்லியில் அதிவேகமாக சென்ற அரசுப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் மீது மோதி ஏற்பட்ட விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஆத்திரமடைந்த பொதுமக்கள் 2 பேருந்துகளை கொளுத்தியதுடன், 5 அரசு பேருந்துகளை அடித்து நொறுக்கியுள்ளனர். தலைநகர் டெல்லியில் நிகழ்ந்த சம்பவத்தின் பின்னணி என்ன?
டெல்லி நங்லோய் பகுதியில் திங்கட்கிழமை காலை 9.45 மணியளவில் இரண்டு அரசுப் பேருந்துகள் அதிவேகமாக சென்று கொண்டிருந்தன. ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டு யார் முதலில் செல்வது என போட்டி போட்டுக் கொண்டு அவர்கள் பேருந்தை விரட்டிக் கொண்டிருந்தனர். இதனால் பேருந்துக்குள் இருந்தவர்களும், சாலையில் நடமாடிக் கொண்டிருந்தவர்களும் அச்சத்தில் உறைந்து போயினர். இந்த சூழலில், ஒரு அரசுப் பேருந்தை ஓட்டி வந்த தீபக் என்பவர் குறிப்பிட்ட இடத்தில் பேருந்தின் கட்டுப்பாட்டை இழந்தார்.
இதனால், அந்தப் பேருந்தின் முன்னால் சென்றுகொண்டிருந்த ஸ்கூட்டர், ஈ-ரிக்ஷா, பைக் மற்றும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தவர்கள் என அடுத்தடுத்து மோதி பெரும் விபத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் ஸ்கூட்டரில் சென்ற இளைஞர் உட்பட இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்கள் நிஹால் விஹாரைச் சேர்ந்த ரவிகாந்த் சர்மா, ஷிவ் ராம் பூங்காவைச் சேர்ந்த கமல் ஜீத் தில்வாலியா என அடையாளம் காணப்பட்டுள்ளனர். விபத்தில் காயமடைந்த ரூபிகமாரி என்ற பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு கண்ணைச் சுற்றி 17 தையல்கள் போடப்பட்டுள்ளன.
விபத்து நடந்தவுடன் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் அப்பகுதியில் திரண்டனர். விபத்து நடந்தபோது இரண்டு அரசுப் பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று ரேஸ் வைத்ததே இந்த விபத்துக்கு காரணம் என்று அவர்கள் குற்றம்சாட்டினர். விபத்தை ஏற்படுத்திய பேருந்தை அடித்து நொறுக்கிய மக்கள், அதற்கு தீ வைத்து கொளுத்தினர்.
அப்போது, அந்த சாலை வழியாக வந்த மற்றொரு அரசுப் பேருந்துக்கும் போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். மேலும், அடுத்தடுத்து வந்த ஐந்து அரசுப் பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். விபத்தை ஏற்படுத்திய பேருந்து ஓட்டுநர் தீபக் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நிகழ்ந்த இந்த சம்பவம் தலைநகர் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


