இப்படி ஒரு ஒப்பந்தமே தேவையில்ல: இந்தியா- அமெரிக்கா வர்த்தக பேச்சுவார்த்தையில் திடீர் டிவிஸ்ட்..!!
இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே ஓராண்டுக்கும் மேலாக வர்த்தக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஆனால் இது வரை ஒரு முதல் கட்ட ஒப்பந்தம் கூட கையெழுத்தாகவில்லை. இதோ ஒப்பந்தம் வந்துவிடும் அடுத்த மாதம் வந்துவிடும் என்றெல்லாம் பேட்டிகள் வருகின்றனவே தவிர இதுவரை ஒப்பந்தம் கையெழுத்தாகவே இல்லை.
குறிப்பிட்ட சில விஷயங்களில் இந்தியா அமெரிக்காவுக்கு வளைந்து கொடுக்காமல் இருப்பதே இந்த ஒப்பந்தம் ஏற்படாமல் தள்ளி போக காரணம் என தெரிய வந்துள்ளது. தவறான அல்லது பாதகமான ஒப்பந்தத்தை மேற்கொள்வதை விட, ஒப்பந்தமே இல்லாமல் இருப்பது மேலானது என்பது தான் இந்தியாவின் தற்போதைய அதிகாரப்பூர்வ நிலைப்பாடு என அதிகாரிகள் கூறியுள்ளனர். வர்த்தக ஒப்பந்தம் இரு நாட்டுக்கும் சமமான நன்மைகளை தர வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது என தகவல் கூறுகின்றனர்.

வர்த்தக பேச்சுவார்த்தைகளில் அமெரிக்கா கடைப்பிடிக்கும் Take it or leave it என்ற அணுகுமுறை இந்தியாவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தான் சில விஷயங்களில் உடன்பாடே எட்டாமல் இருக்கிறது என சொல்லப்படுகிறது. இந்தியாவின் வர்த்தக நலன்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையிலோ அல்லது இந்தியாவின் வேளாண் துறைக்கு பாதிப்பு ஏற்படும் வகையிலோ ஒப்பந்தம் இருக்கக்கூடாது என்பதில் இந்தியா கவனமாக இருக்கிறது என அதிகாரிகள் கூறி இருப்பதாக நியூஸ் 18 செய்தி தெரிவிக்கிறது.
இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக பேச்சுவார்த்தையின் அடுத்த கட்டம் ஆகஸ்ட் 25-ஆம் தேதி நடைபெற உள்ளது. முன்னதாக அமெரிக்கா தங்களின் வேளாண் பொருட்களுக்க் இந்திய சந்தையில் அனுமதி கேட்டிருந்த நிலையில் அது இந்திய விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் முடியாது என இந்தியா திட்டவட்டமாக மறுத்துவிட்டது. அதே போல குறிப்பிட்ட சில அமெரிக்க பொருட்கள் இந்திய சந்தைக்கு வருவதை மத்திய அரசு விரும்பவில்லை. இதனால் தான் ஒப்பந்தம் இறுதியாகாமல் இழுபறியாகவே நீடிக்கிறதாம்.
இந்த வர்த்தக பேச்சுவார்த்தைகளில் இழுபறி நீடித்தால், அது இந்தியா-அமெரிக்கா இடையிலான நீண்டகால உறவுகளை பாதிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை இன்னும் தாமதப்படுத்தும். எனவே முதலில் இடைக்கால ஒப்பந்தம் தேவை, ஆனால் அது இரு நாடுகளும் ஏற்கும் வகையில் இருக்க வேண்டும் என்பது தான் இந்தியாவின் நிலைப்பாடு என அதிகாரிகள் கூறுகின்றனர்.
இந்தியா, அமெரிக்காவுடன் இணக்கமான வர்த்தக உறவை விரும்பினாலும், டிரம்ப் நிர்வகத்தின் தன்னிச்சையான அழுத்தங்களுக்கு பணியப்போவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறது என அதிகாரிகள் கூறுகின்றனர்.இதனால் அவசரப்பட்டு ஒரு ஒப்பந்தம் மேற்கொள்ளாமல் இருதரப்பும் ஏற்கும் வகையிலான உடன்பாடு ஏற்படும் வரை காத்திருக்கலாம் என மத்திய அரசு கருதுகிறதாம். விரைவில் இரு தரப்பு ஒப்பந்தம் ஏற்பட்டால் ஜவுளி, தோல் பொருட்கள் என தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநில உற்பத்தியாளர்களுக்கு நன்மை கிடைக்கும்.

