Last Updated:
இன்ஸ்டா பிரபலம் சந்தீபா விர்க் 40 கோடி ரூபாய் பண மோசடியில் அமலாக்கத்துறையினர் கைது செய்தனர்.
பண மோசடி வழக்கில் இன்ஸ்டா பிரபலம் சந்தீபாவை அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்ஸ்டாகிராம் பிரபலம் சந்தீபா விர்க். இவர் தன்னை தொழில்முனைவோர் மற்றும் நடிகை என கூறி சுற்றிவந்துள்ளார். தன்னை hyboocare.com என்ற வலைதளத்தின் உரிமையாளர் என அடையாளப்படுத்தி உள்ளார். இந்த வலைதளத்தின் மூலம் அங்கீகரிக்கப்பட்ட அழகு சாதனப் பொருட்களை விற்பனை செய்வதாக விளம்பரப்படுத்தியுள்ளார். அத்துடன், அழகுக் கலை தொடர்பான வீடியோக்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும், தான் ஒரு நடிகை என்று கூறியதை ஃபாலோயர்கள் நம்ம வேண்டும் என்பதற்காகவே, போட்டோ ஷூட் எடுத்த வீடியோக்களை இணையத்தில் அள்ளிப் போட்டுள்ளார். இதன் காரணமாகவே சந்தீபாவின் இன்ஸ்டாகிராரை 12 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பின்தொடந்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக அமலாக்கத்துறை அதிகாரிகள், டெல்லி மற்றும் மும்பையில் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனையில் இறங்கினர். அப்போது, மொகாலியில் உள்ள காவல் நிலையத்தில் சந்தீபா மீது ஏமாற்றுதல் மற்றும் மோசடி என இரு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது தெரியவந்தது. இது, அமலாக்கத்துறை அதிகாரிகளின் கவனத்துக்கும் சென்றது.
உடனே, அவரை விசாரணை வளையத்திற்கு கொண்டு வந்து விசாரணையை தீவிரப்படுத்தினர். விசாரணையில், சந்தீபா கூறிய, அழகு சாதன பொருட்கள் விற்பனை செய்யப்படும் இணையதளம் முறையாக செல்படவில்லை என்பது தெரியவந்தது. அதில், அவர் தனது விவரங்களை முறையாக பதிவிடாமல் பலரையும் ஏமாற்றி வந்தது அம்பலமானது. தொழில்முனைவோர் என கூறிய சந்தீபா, எந்த வகையில் கோடிக்கணக்கில் சம்பாதித்து வீடு மற்றும் அசையா சொத்துகளை வாங்கினார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இதையடுத்து, 40 கோடி ரூபாய் பண மோசடியில் ஈடுபட்ட வழக்கில் அவரை, அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். மேலும், வெள்ளிக்கிழமை வரை காவலில் எடுத்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் , நடராஜன் சேதுராமன் என்பவருடன் சந்தீபாவுக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே, அவர் தான் இன்ஸ்டா பிரபலத்துக்கு கோடிக்கணக்கில் பணம் கொடுத்தாரா என்ற கோணத்திலும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால், தனக்கும், சந்தீபாவுக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என்று நடராஜன் சேதுராமன் தெரிவித்துள்ளார். இருந்த போதும், இன்ஸ்டாகிராம் மூலம் பிரபலமான இளம்பெண், கோடிக்கணக்கில் எப்படி மோசடி செய்தார் என தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால், முக்கியப்புள்ளிகள் இந்த வழக்கில் சிக்குவதற்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
August 14, 2025 4:19 PM IST


