
காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் 50 மி.மீ இற்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளதுடன், இடிமின்னல் தொடர்பில் முன்னெச்சரிக்கையாக இருக்குமாறும் அறிவுறுத்தியுள்ளது.
இன்றைய தினம் காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் 50 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இன்றைய வானிலை நிலவரம் தொடர்பில் திணைக்களத்தினால் இன்று வெள்ளிக்கிழமை (18) அதிகாலை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே, இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, வடமேல் மாகாணத்தின் பல பகுதிகளிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.
ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் பிற்பகல் 01 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன் மின்னல் தாக்கங்களும் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, இவ்வாறான இயற்கை அனர்த்தங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களைக் குறைத்துக்கொள்ள தேவையான சகல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமாறு, பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

