Business
oi-Vigneshkumar
மும்பை: பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு இன்று (ஜூலை 16) மிக முக்கியமான நாளாகும். ஹெச்.சி.எல், எம்ஆர்எஃப், டாபர் இந்தியா, BHEL, கோடாக் வங்கி, ஸ்ரீ சிமெண்ட் உள்ளிட்ட 68 நிறுவனங்களின் பங்குகள் நாளை ஜூலை 17-ம் தேதி எக்ஸ்-டிவிடெண்ட் என்ற நிலைக்கு செல்ல உள்ளன. இந்த நிறுவனங்கள் மொத்தமாக ரூ.1,365 கோடிக்கும் அதிகமான டிவிடெண்ட் தொகையை வழங்கவுள்ள நிலையில், அதை பெற இன்றே கடைசி வாய்ப்பாகும்!
பல்வேறு நிறுவனங்கள் காலாண்டிற்கு ஒரு முறை தங்களுக்கு வரும் லாபத்தில் முதலீட்டாளர்களுக்கு டிவிடெண்ட் தொகையை பிரித்து கொடுக்கும். அதன்படி இப்போது இந்தியாவில் பல்வேறு நிறுவனங்களும் டிவிடெண்ட் தொகையை அறிவித்துள்ளன. பல நிறுவனங்களின் டிவிடெண்ட் தொகையை பெற இன்றே கடைசி நாள்.

டிவிடெண்ட்
ஏனென்றால் நாளைய தினம் ஜூலை 17-ம் தேதி இந்த பங்குகள் எக்ஸ்-டிவிடெண்ட் நிலைக்கு செல்லவுள்ளன. இதனால் டிவிடெண்ட் தொகையை பெற விரும்பும் முதலீட்டாளர்களுக்கு இன்று தான் கடைசி வாய்ப்பு. செபியின் T+1 செட்டில்மென்ட் ரூல்ஸ்படி, ரெக்கார்டு தேதிக்கு ஒரு வர்த்தக நாளுக்கு முன்பாக பங்குகளை வாங்கியிருந்தால் தான் அந்த பங்குகள் சரியான நேரத்தில் டிமாட் கணக்கில் வரவு வைக்கப்படும். அப்போது தான் நமக்கு டிவிடெண்ட் கிடைக்கும்.
ஹெச்.சி.எல்.
இந்தியாவின் முக்கிய ஐடி சர்வீஸ் நிறுவனமான ஹெச்.சி.எல், ஒரு பங்குக்கு ரூ.12 இடைக்கால டிவிடெண்ட் அறிவித்துள்ளது. 2026-27 நிதியாண்டின் முதல் காலாண்டில் அதன் நிகர லாபம் 20% உயர்ந்து ரூ.4,624 கோடியாக இருந்தது. 2000ம் ஆண்டு முதல் இதுவரை ஹெச்.சி.எல். 99 முறை டிவிடெண்ட் வழங்கியுள்ளது. தற்போது இந்த பங்கின் டிவிடெண்ட் விகிதம் 5.14% ஆக உள்ளது.
எம்ஆர்எஃப்
இந்தியாவின் காஸ்ட்லி பங்குகளின் எம்ஆர்எஃப் ஒரு பங்குக்கு ரூ.229 டிவிடெண்ட் வழங்குகிறது. எது ரூ.229யா என நீங்கள் ஷாக் ஆகலாம். ஆம் உண்மைதான். ஆனால், ஒரு எம்ஆர்எஃப் பங்கு இப்போது 1,31,700 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. எனவே, அவ்வளவு பெரிய தொகையை உங்களால் முதலீடு செய்ய முடியுமா என்பதைப் பார்க்க வேண்டும்.
அதேபோல 3M இந்தியாவும் மிக பெரிய டிவிடெண்ட்டை அறிவித்துள்ளது. அந்நிறுவனம் ரூ.160 பைனல் டிவிடெண்டும், ரூ.346 ஸ்பெஷல் டிவிடெண்டும் சேர்த்து மொத்தம் ரூ.506 வழங்குகிறது. மேலும், ஹனிவெல் ஆடோமேஷன் (ரூ.110), பைசர் (ரூ.75), ஸ்ரீ சிமெண்ட்(ரூ.70), கமின்ஸ் இந்தியா(ரூ.46), லக்ஷிமி மெஷின் ஒர்க் (ரூ.35), Atul (ரூ.30) போன்ற நிறுவனங்கள் அதிக டிவிடெண்ட் வழங்குகிறது.
இதர நிறுவனங்கள்
இது தவிர டாபர் இந்தியா ரூ.5.50 இறுதி டிவிடெண்ட் வழங்குகிறது. கோட்டாக் வங்கி ரூ.0.65 டிவிடெண்டும், BHEL ரூ.1.40 டிவிடெண்டும் அறிவித்துள்ளன. மேலும் ப்ளூ ஸ்டார் (ரூ.8.50), சிடிஎஸ்எல் (ரூ.12.75), லூபின் (ரூ.18), ஜேகே லக்ஷிமி சிமெண்ட் (ரூ.6.50), யுபிஎல் (ரூ.6), சோனாட்டா சாப்ட்வேர் (ரூ.4.15), ஹேப்பியஸ்ட் மைண்ட்ஸ் (ரூ.3.65), உள்ளிட்ட பல நிறுவனங்களும் டிவிடெண்ட் அறிவித்துள்ளன.
அதேநேரம் ஒரு பங்கை டிவிடெண்ட் பெற மட்டும் வாங்குவது சரியான முதலீட்டு உத்தி இல்லை என்றே வல்லுநர்கள் கூறுகின்றனர். ஏனென்றால் எக்ஸ்-டிவிடெண்ட் தேதிக்குப் பிறகு, பங்கு விலை கணிசமாகச் சரியும். எனவே அதை மட்டும் கருத்தில் கொண்டு வாங்குவது வேஸ்ட்! ஒரு நிறுவனத்தின் நிதி நிலை, வளர்ச்சி, வாய்ப்பு மற்றும் செயல்திறன் ஆகியவற்றையும் முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டும்.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்!




