இனி IT துறையை நம்புனா வேலைக்கு ஆகாது..!! உண்மையை உடைக்கும் Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு..!!
ஒரு காலத்தில் இந்தியாவில் அதிகமான வேலைவாய்ப்புகளை உருவாக்கி தந்த ஒரு துறையாக ஐடி துறை இருந்தது. ஐடி துறை வளர்ச்சி தான் பெங்களூரு போன்ற மாபெரும் நகரங்களின் வளர்ச்சிக்கே காரணம். ஐடி வேலை என்றாலே நல்ல சம்பளம், வெளிநாடுகளுக்கு ஆன்சைட் வேலைக்கு அனுப்புவார்கள் என இளைஞர்கள் உற்சாகமாக செல்வார்கள்.
ஐடி வேலைக்கான படிப்புகளும் இந்தியாவில் கொடி கட்டி பறந்த காலம் உண்டு. ஆனால் அண்மை காலமாக ஐடி நிறுவனங்களில் ஊழியர்கள் பணிநீக்கம், கட்டாய ராஜினாமா என பல பிரச்சினைகளை காண நேரிடுகிறது. இதனால் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கும் மாணவர்கள் இனி ஐடி வேலைகள் கிடைக்காதோ என கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

இத்தகைய சூழலில் இந்தியாவின் ஐடி சேவை நிறுவனமான சோஹோவின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, ஐடி துறையில் சமீபகாலமாக புதிய வேலைவாய்ப்புகள் பெருமளவில் உருவாக்கப்படவில்லை என எச்சரித்துள்ளார். தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள ஸ்ரீதர் வேம்பு, ஐடி நிறுவனங்கள் தற்பொழுது ஊழியர்களை பணிநீக்கம் செய்யாவிட்டாலும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் தேக்கநிலையை சந்திப்பதாக கூறியுள்ளார். சோஹோ கூட வேலைவாய்ப்புகளை உருவாக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
நிறுவனங்கள் முன்பு புதிய ஊழியர்களை பணியமர்த்த செலவழித்த நிதியை, இப்போது செயற்கை நுண்ணறிவு கட்டமைப்பு மற்றும் அதற்கு தேவையான தரவு மையங்களுக்கு செலவிடுகின்றன என கூறுகிறார். குறிப்பாக, சர்வர் மற்றும் மெமரிகளின் விலை அதிகரித்துள்ளதால், அந்த பணத்தை AI உட்கட்டமைப்பிற்காக திருப்பிவிட வேண்டிய கட்டாயம் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
The real issue facing our nation is how to create jobs for our massive cohort of youth in this very uncertain global landscape.
Sadly, the IT industry, including Zoho, have not created many jobs in recent years. We have not laid off people but we are not creating new jobs…
— Sridhar Vembu (@svembu) August 2, 2026 “>
மென்பொருள் தயாரிப்பு வேகமாக இருந்தாலும், இன்னும் அதிக மென்பொருள்கள் தேவையா என்ற கேள்வி எழுந்துள்ளது என கூறும் அவர் மென்பொருள் துறை இப்போது ஒரு அத்தியாவசியப் பொருள் போன்ற நிலையை அடைந்துள்ளதால், வளர்ச்சி வேகம் குறைந்துள்ளது என தெரிவித்துள்ளார். உற்பத்தி துறை முதல் ஐடி வரை அனைத்து துறைகளிலும் ஆட்டோமேஷன் அதிகரித்துள்ளது. இது பொருட்களை குறைந்த விலையில் உற்பத்தி செய்ய உதவினாலும், அதிக அளவில் மனித ஆற்றலை பயன்படுத்தும் தேவையை இது குறைத்துவிட்டது என கூறியுள்ளார்.
பெரிய அளவிலான உற்பத்தி துறை தானியங்கி மயமாகிவிட்ட நிலையில், வேலைகளுக்கு மனிதர்கள் தேவைப்படாத நிலை உருவானால் என்ன ஆகும் என்ற கேள்வியை அவர் முன் வைத்துள்ளார். இது பெரிய பொருளாதார சவாலாக உருவாக போகிறது என்றும் அரசு இந்த நிலையை புரிந்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டு கொண்டுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக டெக் நிறுவனங்களில் பெரிய அளவிலான பணிநீக்கங்களை காண முடிகிறது. கடந்த ஆண்டில் டிசிஎஸ் நிறுவனம் கூட ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. பல்வேறு ஸ்டார்ட் அப் தொடங்கப்படுவதும் மூடப்படுவதும் பார்க்க முடிகிறது. ஏராளமான இளைஞர்கள் , பட்டப்படிப்பை முடித்தவர்கள் என பலரும் வேலைவாய்ப்பு கிடைக்காமல் தவிக்கின்றனர். ஏஐ வருகை, வேலைவாய்ப்புக்கான திறன் இல்லாதது என பல பிரச்சினைகள் இதற்கு காரணமாக உள்ளன. ஆனால் இது நீண்ட காலத்திற்கு இப்படியே செல்ல முடியாது என்பது தான் நிபுணர்கள் கூறும் கருத்து.
