இனி ரயில் புறப்பட 15 நிமிடங்களுக்கு முன்பு வரை கூட டிக்கெட் முன்பதிவு..!! இந்திய ரயில்வேயின் மெகா அப்டேட்..!!
இந்தியாவில் சௌகரியமாக குறைந்த கட்டணத்தில் பயணிக்கலாம் என்பதால் தான் லட்சக்கணக்கான மக்களின் தேர்வாக ரயில் பயணங்கள் இருக்கின்றன. இந்திய ரயில்வே நிர்வாகமும் பயணிகளின் வசதிக்காக அவ்வப்போது மாற்றங்களை கொண்டு வந்த வண்ணம் உள்ளது.
இதுநாள் வரை ரயில் புறப்பட குறிப்பிட்ட மணி நேரங்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு நிறுத்தபட்டு விடும். ஆனால் இனி அந்த பிரச்சினை இல்லை. வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மற்றும் பிற முன்பதிவு செய்யப்பட்ட ரயில்களில், ரயில் புறப்படுவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாகக் கூட காலியாக உள்ள இருக்கைகளை பயணிகள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

ரயில் புறப்படுவதற்கு முன்பாக சார்ட் தயாரிக்கப்பட்டவுடன் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி நிறுத்தப்பவது தான் வழக்கம். இதனால், ரயிலில் இருக்கைகள் காலியாக இருந்தாலும், கடைசி நேரத்தில் பயணம் செய்ய விரும்பும் பயணிகளால் டிக்கெட் எடுக்க முடியாமல் போய்விடுகிறது. இந்நிலையில் பயணிகளின் இந்த சிரமத்தை போக்கவும், ரயிலில் காலியாக இருக்கும் இருக்கைகளை முழுமையாக பயன்படுத்தவும் ரயில்வே இந்த புதிய நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன்படி ரயில் புறப்படுவதற்கு 15 நிமிடங்கள் முன்பாக வரை காலியாக உள்ள இருக்கைகளை முன்பதிவு செய்யலாம் என நியூஸ் 18 செய்தி கூறுகிறது. வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட அனைத்து முன்பதிவு செய்யப்பட்ட ரயில்களுக்கும் இது பொருந்தும். வழக்கம்போல IRCTC இணையதளம் , ரயில் கனெக்ட் (Rail Connect) மொபைல் செயலி அல்லது ரயில் நிலையங்களில் உள்ள பயணிகள் முன்பதிவு மையங்கள் மூலம் டிக்கெட்டுகளைப் பதிவு செய்யலாம்.
சார்ட் தயாரிக்கப்பட்ட பிறகு, எந்தெந்த இருக்கைகள் காலியாக இருக்கிறதோ, அதை மட்டுமே இந்த வசதி மூலம் முன்பதிவு செய்ய முடியும். எனவே, அனைத்து ரயில்களிலும் எப்போதும் டிக்கெட் கிடைக்கும் என கூற முடியாது. பயணிகள் பயணத்திற்கு முன்பாக IRCTC தளத்தில் இருக்கை வசதி இருப்பதை உறுதி செய்து கொள்வது நல்லது. ரயில் நிலையத்திற்கு செல்லும்போது சரியான அடையாள அட்டைகளை கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.
மேலும் அதிகாரப்பூர்வமான IRCTC தளங்கள் மூலம் மட்டுமே டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும் என ரயில்வே அறிவுறுத்தியுள்ளது. திடீரென பயணம் செய்ய வேண்டியவர்களுக்கும், ஏற்கனவே டிக்கெட் கிடைக்காமல் தவித்தவர்களுக்கும் இந்த புதிய அறிவிப்பு பெரும் நிம்மதியை அளிக்கும். இது ரயில்வேயின் வருவாயை அதிகரிப்பதோடு, பயணிகளின் பயண அனுபவத்தையும் மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

