
நாட்டில் வர்த்தக நிலையங்களில் பொருட்களைக் கொள்வனவு செய்யும் போது வழங்கப்படும் பொலித்தீன் பைகளுக்கு இன்று முதல் கட்டாயம் பணம் அறவிடப்படவுள்ளது. இந்த புதிய திட்டம் நாட்டில் இன்று நடைமுறைக்கு வருகிறது.
கடந்த அக்டோபர் முதலாம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி இலக்கம் 2456/41-ல், வியாபார நிலையங்களில் வழங்கப்படும் பொலித்தீன் பைகளுக்கு கட்டணம் விதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, இதுவரைக் காலமும் பொருட்களை கொண்டு செல்வதற்கு இலவசமாக வழங்கப்பட்ட ஷொப்பிங் பைகள் உள்ளிட்ட அனைத்துப் பொலித்தீன் பைகளுக்கும் இன்று முதல் கட்டாயம் பணம் அறவிடப்பட வேண்டும் என நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்துள்ளது.
இந்த புதிய நடைமுறையின் கீழ், பைகளின் அளவைப் பொறுத்து கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன:
நடுத்தர அளவிலான கைப்பிடி பைக்கு 3 ரூபா கட்டணம் அறவிடப்படவுள்ளது. பெரிய கைப்பிடி பைக்கு 5 ரூபா கட்டணம் அறவிடப்படவுள்ளது.
இந்தக் கட்டண அறவீட்டு நடைமுறையை கீல்ஸ் (Keells), காகில்ஸ் புட் சிட்டி (Cargills Food City), லாப்ஸ் சூப்பர் (Laks Super), ஸ்பார் (Spar) மற்றும் குளோமார்க் (GloMark) உள்ளிட்ட முன்னணி வியாபார நிலையங்கள் இணைந்து அறிவித்துள்ளன.
இந்தக் கட்டண அறவீட்டு நடவடிக்கையின் முக்கிய நோக்கம், மக்கள் மத்தியில் பொலித்தீன் பை பாவனைகளைக் குறைப்பதே ஆகும். இதன்மூலம், பொருட்களை கொள்வனவு செய்பவர்கள் தங்களுக்குத் தேவையான பைகளை தம்வசமே எடுத்துச் செல்ல ஊக்குவிக்கப்படுகின்றனர்.
இதேவேளை, குறித்த பைகளுக்கென அறவிடப்படவுள்ள தொகையை வர்த்தக நிலையங்களில் கட்டாயம் காட்சிப்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

