உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலுக்காகத் தொடர்ச்சியாகக் குரல் கொடுக்கும் கர்தினாலும் அவரது சபையினரும், இந்த நாட்டில் மக்கள் அநியாயமாகக் கொல்லப்பட்டதை ஏன அங்கீகரிக்கத் தயங்குகிறார்கள்? எனத் தமிழரசுக்கட்சியின் யாழ் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (11) இடம்பெற்ற ‘வலுசக்தி மற்றும் வாழ்க்கைச் செலவுப் பாதுகாப்புத் திட்டம்’ தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்:
“கடந்த மே 27-ஆம் திகதி பருத்தித்துறை முனைப் பகுதியிலிருந்து கடலுக்குச் சென்ற நான்கு மீனவர்கள் காணாமல் போயுள்ளனர். அவர்களில் தந்தை மற்றும் மகனும் அடங்குவர். அவர்களைக் கண்டுபிடிப்பதற்கான முறையான நடவடிக்கைகளை அரசாங்கம் உரிய நேரத்தில் எடுக்கவில்லை என மீனவ சமூகம் முறைப்பாட்டு செய்துள்ளது. அரசாங்கம் இவர்களுக்கு நம்பிக்கையளிக்கும் வகையில் என்ன நடந்தது என்பதைக் கண்டறிந்து தெளிவான பதிலளிக்க வேண்டும்.
மறுபுறம், அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் கடந்த மே 18-ஆம் திகதி கொழும்பில் நடந்த நிகழ்வொன்றில், இந்த நாட்டில் இனவழிப்பு நடந்ததாகவும், அது தொடர்வதாகவும் பகிரங்கமாகக் கருத்துத் தெரிவித்திருந்தார். அவர் கூறிய இந்தக் கருத்துக்காக கிறிஸ்தவ அமைப்புகள் அவருக்குக் கண்டனம் தெரிவித்திருந்தன. உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்காகக் குரல் கொடுக்கும் கர்தினாலும் சபையினரும், நாட்டில் மக்கள் அநியாயமாகக் கொல்லப்பட்டதை ஏற்றுக்கொள்வதற்கு ஏன் தயங்குகிறார்கள்? மன்னார் முன்னாள் ஆயர் இராஜப்பு ஜோசப் வெளிப்படையாக இனவழிப்பு என்று கூறியிருந்தபோதும், அதற்கான நீதியைக் கோர கத்தோலிக்க சபை இன்னும் தயாராக இல்லை. அருட்தந்தை ஜீவந்த பீரிஸின் கருத்தை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.
அதேபோல், யாழ்ப்பாணத்தில் 35 ஆண்டுகளாக மக்கள் இடம்பெயர்ந்து சொந்த நிலங்களுக்குத் திரும்ப முடியாமல் உள்ளனர். குறிப்பாக மயிலிட்டி, தையிட்டி, வசாவிளான், பலாலி போன்ற பகுதிகள் மிகை உற்பத்தியைத் தரக்கூடிய வளமான இடங்கள். ஆனால் இன்று இராணுவம் அந்த நிலங்களை ஆக்கிரமித்து சலூன் நடத்துவதும், விவசாயம் செய்வதுமாக இருக்கின்றதே தவிர, மக்களை அவர்களின் சொந்த இடங்களில் குடியேற அனுமதிக்கவில்லை.
நல்லிணக்கம் மற்றும் மனிதாபிமானம் பற்றிப் பேசும் அரசாங்கம், அந்த மக்களை அவர்களின் சொந்த இடங்களுக்குத் திரும்ப அனுமதிக்க வேண்டும். 35 ஆண்டுகளாக உறவினர் வீடுகளில் தஞ்சமடைந்துள்ள மக்களின் நியாயமான காணிக்கோரிக்கைகளை நிறைவேற்றி, மாறி மாறிப் பொய்களைக் கூறுவதை விட்டுவிட்டு அவர்களை மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் வலியுறுத்தினார்.

