Last Updated:
புதுக்கோட்டையில் பள்ளி குழந்தைகளுக்கான வண்ண வண்ண புத்தகப் பை மற்றும் லஞ்ச் பேக் தயாரிப்பு மற்றும் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.
தமிழகத்தில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2 ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி மாணவர்களுக்கு தேவையான புத்தகப் பை, பேனா, நோட்டுகள் போன்றவற்றை வாங்குவதில் குழந்தைகள் மற்றும் பெற்றோர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்திலும் பள்ளி புத்தகப் பை மற்றும் லஞ்ச் பேக் தயாரிப்பு மற்றும் விற்பனை ஜோராக நடைபெற்று வருகிறது. புதுக்கோட்டை கீழ ராஜ வீதியில் சுமார் 23 வருடங்களாக குழந்தைகளுக்கான பள்ளி புத்தகப் பை புத்தகப் பை மற்றும் லஞ்ச் பேக் போன்றவற்றை தயாரித்து விற்பனை செய்து வருகிறார் முருகேசன்.
புத்தகப் பை விற்பனை இந்த வருடத்தின் புதிய கலெக்ஷன்கள் மற்றும் தரமான புத்தகப் பைகளை பார்த்து வாங்குவது எப்படி என்பது குறித்து முருகேசன் கூறுகையில், “நாங்க ஸ்கூல் பேக், லஞ்ச் பேக், திருமண பைகள் போன்றவை தயாரித்து விற்பனை செய்து வருகின்றோம். தற்போது பள்ளிகள் திறக்க உள்ளதால் ஸ்கூல் பேக் விற்பனை சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.
இந்த வருஷம் புதிதாக மெட்டீரியல்களை பயன்படுத்தி தண்ணீர் பட்டாலும் நனையாத அளவிற்கு ஸ்கூல் பேக், லஞ்ச் பேக் போன்றவற்றை பள்ளி குழந்தைகளுக்காக பல்வேறு வண்ணங்களில் அவர்களுக்கு பிடித்த வகையான பொம்மை படங்கள் வைத்து தயார் செய்து வருகின்றோம். குழந்தைகளும் விரும்பி இது போன்ற கார்ட்டூன் படங்கள் வைத்த பேக் வகைகளை வாங்கி செல்கின்றனர்.
பொதுவாக பள்ளி குழந்தைகள் என்றாலே அதிக அளவில் புத்தகங்கள் நோட்டுகள் ஆகியவற்றை சுமந்து செல்ல வேண்டியது இருக்கும். அத்தோடு பேக்குகளும் அதிக சுமையோடு இருந்தால் குழந்தைகளுக்கு மேலும் சிரமமாக இருக்கும். அதனை குறைக்கும் வகையில் நாங்கள் மெட்டீரியல் வாங்கும் போதே தரமான மெட்டீரியல்களாக வாங்கி குழந்தைகளுக்கு அதிக சுமை இல்லாத அளவிற்கு தயார் செய்து விற்பனை செய்து வருகின்றோம்.
சென்ற வருடத்தை காட்டிலும் இந்த வருடம் விற்பனை நன்றாகவே நடந்து வருகிறது. மேலும் இனிவரும் நாட்களிலும் விற்பனை இன்னும் அதிகமாக நடக்க வாய்ப்பு இருக்கிறது. 250 ரூபாய் முதல் 1500 ரூபாய் வரை பேக்குகள் விற்பனைக்கு உள்ளது. மேலும் காம்போ ஆஃபர்களும் வழங்கி வருகிறோம். அதாவது ஸ்கூல் பேக், லஞ்ச் பேக், பென்சில் பவுச் போன்றவற்றை ஒரே டிசைனில் தயார் செய்தும் கொடுத்து வருகின்றோம். அதனை அதிக அளவில் மக்கள் விரும்பி வாங்கி செல்கின்றனர்.
பொதுமக்கள் பேக்குகளை வாங்கும் போது அதன் தரத்தினை பைகளை தொட்டுப் பார்த்தே தெரிந்து கொள்ள முடியும். அதில் பயன்படுத்தப்பட்டுள்ள மெட்டீரியல் போன்றவற்றை கவனித்து பார்த்து வாங்கினால் தரமான பேக்குகளை வாங்கலாம். பள்ளி திறக்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், எங்களுக்கு அதிக அளவில் விற்பனை ஆகும் என்று எதிர்பார்க்கின்றோம்” எனத் தெரிவித்தார்.
Pudukkottai,Tamil Nadu
June 01, 2025 8:00 PM IST

