ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் லக்னோவிற்கு எதிரான போட்டியில் டெல்லி வெற்றியடைந்தும் அந்த அணியால் பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யமுடியவில்லை. கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய நிலையில் மீதமுள்ள அந்த இரண்டு அணிகள் எது? சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கான வாய்ப்புகள் என்ன? விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு…
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிக்கட்ட போட்டிகள் விறுவிறுப்பின் உச்சம் தொடுகின்றன. தங்களுக்கு பிடித்த அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா என்ற ஆசையோடு ரசிகர்கள் புள்ளிப்பட்டியலை பார்த்து கணக்கு போட ஆரம்பித்துள்ளனர்.
தனது கடைசி லீக் ஆட்டத்தில் டூ ஆர் டை என்ற முறையில் லக்னோவை எதிர்கொண்ட டெல்லி அணி போராடி வென்றும் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதியடைவில்லை. மேலும் போர போக்கில் லக்னோவையும் அழைத்துச்சென்றுவிட்டது. அத்துடன் டெல்லி வென்றதன் மூலம் ராஜஸ்தான் அணி 16 புள்ளிகளுடன் பிளே ஆஃப் சுற்றை உறுதி செய்துள்ளது.
தற்போதுவரை கொல்கத்தா, ராஜஸ்தான் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ள நிலையில் மும்பை,பஞ்சாப்,குஜராத் ஆகிய அணிகள் அதிகாரப்பூர்வமாக வெளியேறியுள்ளனர்.
டெல்லி, லக்னோ ஆகிய அணிகளும் ஏறக்குறைய பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை இழந்துவிட்டனர்.
ஹைதராபாத், சென்னை, பெங்களூரு, ஆகிய மூன்று அணிகளில் இரண்டு அணிகளுக்கே பிளே ஆஃப் சுற்று வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
சி.எஸ்.கே அணியை பொருத்தவரை 18ம் தேதி பெங்களூருவில் நடைபெறவுள்ள ஆர்.சி.பி அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றால் பிளே ஆஃப் கண்ஃபார்ம்… மழையால் போட்டி கைவிடப்பட்டாலும் பிளே ஆஃப் கண்ஃபார்ம்…
போராடி தோல்வியை சந்தித்தாலும் பிளே ஆஃப் கண்ஃபார்ம்…
ஒருவேளை அதிக ரன் வித்தியாசத்தில் தோல்வியை சந்திக்கும் பட்சத்தில் நமது ரன் ரேட் குறைந்து ஆர்.சி.பி-யின் ரன் ரேட் அதிகரித்தால் நமக்கு சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.
அதன் படி சேசிங்கில் சென்னை அணி 18 ரன்களுக்கு குறைவாக தோல்வியை சந்தித்தால் ஆர்.சி.பி அணியை விட ரன் ரேட் குறைய வாய்ப்புள்ளது. அப்படி நிகழ்ந்தால் ஹைதராபாத அணி அடுத்து விளையாடவுள்ள குஜராத், பஞ்சாப் அணிக்கு எதிராக மோசமாக தோல்வியை சந்தித்து சென்னை அணியை விட ரன் ரேட் குறைந்தால் மட்டுமே சி.எஸ்.கே விற்கு வாய்ப்புள்ளது. அப்போது சென்னை, பெங்களூரு அணி பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யும்.
பெங்களூரு அணிக்கான பிளே ஆஃப் வாய்ப்பு என்பது சென்னை அணியை கட்டாயம் வீழ்த்த வேண்டும். அதுமட்டும் போதாது. ரன் ரேட்டிலும் முந்த வேண்டும் அதாவது முதலில் பேட்டிங் செய்து 200 ரன்கள் குவித்து 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியடைய வேண்டும். ஒரு வேளை சேசிங் என்றால் 18.1 ஓவரிலேயே வெற்றி பெறவேண்டும் இது இரண்டும் நடந்தால் மட்டுமே ஈ சாலா கப் நமதே என்ற கனவில் பயணிக்க முடியும்.
இது இல்லாமல் பெங்களூரு அணிக்கு மேலும் ஒரு வாய்ப்புள்ளது சென்னை அணிக்கு எதிரான போட்டியில் போராடி வெற்றி பெற்று அந்த அணியை விட ரன் ரேட்டில் முந்தவில்லை என்றாலும் ஹைதராபாத் அணி அடுத்த இரண்டு போட்டியிலும் படு மோசமாக தோல்வியை சந்திக்க வேண்டும். குஜராத், பஞ்சாப் அணிகள் 100 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி மேஜிக் நிகழ்த்தினால் பெங்களூருவிற்கு வாய்ப்புள்ளது.
ஹைதராபாத அணியை பொருத்தவரை ஒரு போட்டியில் வெற்றி பெற்றாலே பிளே ஆஃப் சுற்றுக்குள் அடியெடுத்துவைக்கும், ஏதேனும் ஒரு போட்டி மழையால் பாதிக்கப்பட்டு ஒரு புள்ளி பெற்றாலே 15 புள்ளிகளுடன் பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்துவிடும்.
இதையும் படிங்க:
வருமானவரித்துறை அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழப்பு – டெல்லியில் பரபரப்பு
சென்னை, ஹைதராபாத் அணிகளுக்கே பிளே ஆஃப் வாய்ப்பு அதிகம் என ரசிகர்கள், வல்லுநர்கள் கணித்தாலும் ஏதேனும் ஒரு மேஜிக் நிகழ்ந்து பெங்களூரு அணி உள்ளே செல்லும் என ஈ சாலா கப் நமதே ரசிகர்கள் மனதை தேற்றிக்கொள்கின்றனர்.
நியூஸ் 18 தமிழ்நாடு செய்திகளுக்காக சடையாண்டி…
.
&w=750&resize=750,375&ssl=1)
