பொதுக்குழுவா? மாநாடா?
வீரமும் பாசமும் நிறைந்த மதுரை மண்ணில் பொதுக்குழுவா, மாநாடா என வியக்கின்ற வகையில் ஏற்பாடுகளை மேற்கொண்டிருக்கிறார் மதுரை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளரும் மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சருமான திரு.பி.மூர்த்தி அவர்கள். மதுரை மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் திரு.கோ.தளபதி எம்.எல்.ஏ., மதுரை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு.சேடப்பட்டி மு.மணிமாறன் ஆகியோர் உடனிருந்து சிறப்பாகப் பணியாற்றி வருகிறார்கள். தென்மாவட்டக் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் பொதுக்குழு பணிகளில் ஒத்துழைப்பு வழங்கி வருகிறார்கள். பொதுக்குழு நடைபெறும் அரங்கம், அதற்கான பாதைகள், வாகனங்கள் நிறுத்துமிடம், உணவருந்தும் இடம், தங்குமிடங்கள் என ஒவ்வொன்றும் தனித்தன்மையுடன் அமைத்துள்ளதை நாள்தோறும் என்னைத் தொடர்பு கொண்டு தெரிவித்து வருகிறார்கள். காட்சிகளையும் படங்களையும் வாட்ஸ்அப் மூலம் பார்த்து உரிய திருத்தங்களையும் தெரிவித்துள்ளேன். கழகத்தின் முதன்மைச் செயலாளர் மாண்புமிகு அமைச்சர் கே.என்.நேரு, மாண்புமிகு அமைச்சர்கள் எ.வ.வேலு மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர் பொதுக்குழு நடைபெறவுள்ள இடத்தை நேரில் பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்கியதுடன், எனக்கும் அது பற்றிய விவரங்களைத் தெரிவித்துள்ளார்.

