இந்த ஆண்டில் நாடு முழுவதும் 42,848 டெங்கு பாதிப்புகளும், 34 மரணங்களும் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஏடிஸ் கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்கள் இல்லாதவாறு தங்களது சுற்றுப்புறத்தை உறுதி செய்ய அனைத்து தரப்பினரும் இணைந்து செயல்படுமாறு சுகாதார அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது.
மலேசியாவில் இந்த ஆண்டு டெங்கு பாதிப்புகள் 34.8% அதிகரித்துள்ள அதே வேளையில், இந்த நோயினால் ஏற்படும் மரணங்கள் 78.9% உயர்ந்துள்ளன.
நாடெங்கும் ஜூலை 9 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் மொத்தம் 42,848 டெங்கு பாதிப்புகளும் 34 மரணங்களும் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சகம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலக்கட்டத்தில் பதிவான 31,790 பாதிப்புகள் மற்றும் 19 மரணங்களுடன் ஒப்பிடுகையில் மிக அதிகமாகும்.
பதிவான மொத்த பாதிப்புகளில் சிலாங்கூர், கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயா ஆகிய பகுதிகள் மட்டுமே 63.5 விழுக்காட்டைக் கொண்டுள்ளன.
கடந்த ஆண்டின் இதே காலக்கட்டத்தோடு ஒப்பிடுகையில், சிலாங்கூரில் 43.2% அதிகரித்து 19,313 பாதிப்புகளும், கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயாவில் 83.8% அதிகரித்து 7,909 பாதிப்புகளும் பதிவாகியுள்ளன.
இந்த நோய் பரவக்கூடிய நாடுகளில் பொதுவாக ஒவ்வொரு மூன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை பெரிய அளவில் டெங்கு பரவுவது வழக்கம் என்றும், அந்த சுழற்சி முறையின்படியே தற்போதைய உயர்வும் அமைந்துள்ளது என்றும் அமைச்சகம் கூறியுள்ளது.
நோய் பரவலைக் கட்டுப்படுத்த கண்காணிப்பு, கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் மற்றும் சமூக முயற்சிகளை வலுப்படுத்தி வருவதாக அது தெரிவித்தது.
மேலும், பொதுமக்கள் ஏடிஸ் (Aedes) கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யும் இடங்களை அழிக்க வேண்டும், வழக்கமான தூய்மைப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் மற்றும் டெங்கு அறிகுறிகள் தென்பட்டால் ஆரம்பக்கட்டத்திலேயே சிகிச்சை பெற வேண்டும் என்றும் அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
