Last Updated:
அணியின் நிர்வாகத்தில் அதிரடி மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையும் தற்போது வலுத்துள்ளது.
இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி படுதோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, அந்த நாட்டில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த அவமானத்தைச் சந்திப்பதற்குப் பதிலாக, ஏற்கனவே எடுத்த முடிவின்படி இந்தியா உடனான போட்டியை முற்றிலுமாகப் புறக்கணித்திருக்கலாம் என்று அந்நாட்டின் முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் கடும் குமுறலை வெளிப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, இந்தப் போட்டியில் விளையாடாமல் தவிர்த்திருந்தால் இவ்வளவு பெரிய அவமானத்தைத் தவிர்த்திருக்கலாம் என்பதே பலரது கருத்தாக உள்ளது.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை எளிதாக வென்றது. முதலில் விளையாடிய இந்திய அணி 175 ரன்கள் குவித்தது. 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி சேஸிங் செய்த பாகிஸ்தான் 114 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது. இந்தியாவின் வெற்றியை நாடு முழுவதும் ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.
இந்தத் தோல்வியைத் தாங்க முடியாத ஆத்திரத்தில், பாகிஸ்தானின் சில பகுதிகளில் ரசிகர்கள் தங்களது வீடுகளில் இருந்த தொலைக்காட்சி பெட்டிகளை அடித்து உடைத்துத் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.
ரசிகர்களின் இந்த கடும் அதிருப்திக்கு வலுவான ஒரு பின்னணியும் உள்ளது. இந்த உலகக் கோப்பைத் தொடர் தொடங்குவதற்கு முன்பே, வங்கதேச அணி தொடர்பான சில சிக்கல்களால் இந்தியாவுக்குச் சென்று விளையாட மாட்டோம் என்று பாகிஸ்தான் பிடிவாதம் காட்டியது.
நீண்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இந்தியாவுடன் விளையாடச் சம்மதித்த நிலையில், தற்போது கிடைத்துள்ள இந்த மோசமான தோல்வி ரசிகர்களை ஏமாற்றமடையச் செய்துள்ளது. முன்னாள் வீரர் சோயிப் அக்தர் போன்றவர்கள், பாகிஸ்தான் அணியின் செயல்பாடு மிகவும் பலவீனமாக இருந்ததாகவும், வீரர்கள் எந்தவிதத் திட்டமிடலும் இன்றி விளையாடியதாகவும் கடுமையாக விமரிசித்துள்ளனர். அணியின் நிர்வாகத்தில் அதிரடி மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையும் தற்போது வலுத்துள்ளது.


