இந்தோனேசியாவின் மேற்கு ஜாவாவைச் சேர்ந்த போகோரில் உள்ள சியாவி சுங்கச் சாவடியில் நடந்த மோசமான விபத்தில் எட்டுப் பேர் உயிரிழந்தனர். மேலும் 11 பேர் காயமடைந்ததாகக் கூறப்பட்டுள்ளது.
இச்சம்பவம், பிப்ரவரி 4ஆம் தேதி நள்ளிரவு நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
குடிநீர்க் கலன்களை ஏற்றிக்கொண்டு ஜகார்த்தா நோக்கிச் சென்ற லோரி ஒன்று அந்தச் சுங்கச் சாவடிக்கு வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து, சுங்கக் கட்டணம் செலுத்துவதற்காக வரிசையில் நின்றிருந்த சில வாகனங்கள் மீது அந்த லோரி மோதியது. அதனால் ஆறு வாகனங்கள் சேதமடைந்தன. அவற்றில் மூன்று தீப்பிடித்ததாகக் காவல்துறை தெரிவித்துள்ளது
இச்சம்பவத்தில் அந்த சுங்கச் சாவடியின் சுங்கக் கட்டண முகப்புகள் மூன்று சேதமடைந்ததாகவும் தெரிகிறது.
“லோரியின் வேகக் கட்டுப்பாட்டுக் கருவி பழுதானதால் அது மற்ற வாகனங்கள் மீது மோதியதாக நம்பப்படுகிறது. மாண்டவர்கள் அனைவரும் பாதிக்கப்பட்ட வாகனங்களில் இருந்தவர்கள்,” என்றும் காவல்துறை கூறியுள்ளது.


காயமடைந்தவர்கள் சியாவி பொது மருத்துவமனைக்கு விரைந்து கொண்டுசெல்லப்பட்டனர். அவர்களில் நால்வருக்குக் கடுமையான காயங்கள் ஏற்பட்டதாகவும் மேலும் ஏழு பேருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
காயமடைந்தோரில் நால்வர் அந்தச் சுங்கச் சாவடியின் வாடிக்கையாளர் சேவை அதிகாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.


