Last Updated:
உத்தரப்பிரதேசத்தில் 12 வயது சிறுமி ஒரு நிமிட வீடியோவை உருவாக்கி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். அதில் இந்து தெய்வங்களைப் பற்றி இழிவான கருத்துகளைத் தெரிவித்திருந்தார்.
உத்தரப் பிரதேசத்தில் சிறுமி ஒருவர், இந்து தெய்வங்களை அவமதிக்கும் வகையில் இன்ஸ்டாகிராமில் வீடியோ பகிர்ந்ததற்காக சிறுவர் காவல் மையத்திற்கு அனுப்பப்பட்டார். மேலும், அவரது பெற்றோரும் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் பிரண்ட்ஸ் காலனி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மொஹல்லா தாகியா ஆசாத் நகர் திலாவில் நடந்தது.
அக்டோபர் 27 அன்று, 12 வயது சிறுமி ஒரு நிமிட வீடியோவை உருவாக்கி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். அதில் இந்து தெய்வங்களைப் பற்றி இழிவான கருத்துகளைத் தெரிவித்திருந்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக வைரலானதை அடுத்து நெட்டிசன்களும், பல இந்து அமைப்புகளும் கடும் எதிர்ப்புகளைப் பதிவு செய்தனர். அவர்கள் அந்த சிறுமிக்கும், அவளது குடும்பத்தினருக்கும் எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
சமூக ஊடகங்களில் எட்டாவா காவல்துறை மற்றும் உத்தரப்பிரதேச காவல்துறையினரை டேக் செய்து புகார் அளிக்கப்பட்டது. மேலும், அந்த சிறுமிக்கு எதிராக உள்ளூர் காவல் நிலையத்தில் பல புகார்கள் பதிவு செய்யப்பட்டன. அதைத் தொடர்ந்து உடனடியாக நடவடிக்கை எடுத்த போலீசார், சிறுமி கைது செய்யப்பட்டு சிறுவர் காவல் மையத்திற்கு அனுப்பப்பட்டார். அதே நேரத்தில் அவரது பெற்றோர் ஷபீர் மற்றும் ஷபினா இந்தச் செயலைப் பற்றி அறிந்திருந்தும், அவர்களது பெண்ணைத் தடுக்க முயற்சிக்கவில்லை. இந்த அலட்சியம் ஒரு குற்றமாகக் கருதப்பட்டதையடுத்து அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறியதாவது, “அந்தச் சிறுமி இந்து தெய்வங்களை அவமதிக்கும் வகையில் கருத்துகளை இணையத்தில் வெளியிட்டார். சிறுமியின் பெற்றோருக்கு தங்கள் மகள் இதுபோன்ற சர்ச்சைக்குரிய வீடியோவை உருவாக்கப் போகிறாள் என்பது தெரியும். மேலும், இந்தச் செயலில் சிலர் ஈடுபட்டுள்ளனர்.
சமூக வலைதளங்களில் தன்னுடைய ஃபாலோவர்களை அதிகரிப்பதற்காக அந்த வீடியோவை உருவாக்கியதாக சிறுமி எங்களிடம் தெரிவித்தார். நாங்கள் அவளது பெற்றோர்களை கைது செய்துள்ளோம். மக்கள் அந்த வீடியோவை மீண்டும் பகிரவோ அல்லது பரப்பவோ கூடாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். அவ்வாறு செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளனர்.
இந்த வீடியோ பரவலுக்குக் காரணமானதாகக் கூறப்படும் மற்றொரு நபர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அவர் தற்போது தலைமறைவாகிவிட்டதாகவும், அவரை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர். இதனையடுத்து காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் தனது செயலுக்கு பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்கும் ஒரு வீடியோவும் வெளியானது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
November 05, 2025 8:59 PM IST


