International
oi-Nantha Kumar R
இஸ்லாமாபாத்: இந்திய வம்சாவளியை சேர்ந்த கனடா வெளியுறவுத்துறை அமைச்சர் அனிதா ஆனந்த், பாகிஸ்தான் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதுமட்டுமின்றி பாகிஸ்தானின் உதவிக்காக ரூ.452.68 கோடியை அள்ளி கொடுத்துள்ளார். இது நம் நாட்டுக்கான எச்சரிக்கை மணியாக பார்க்கப்படுகிறது.

கனடா நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சராக இருப்பவர் அனிதா ஆனந்த். இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். இந்நிலையில் தான் கனடாவின் வெளியுறவுத்துறை அமைச்சரான பிறகு முதல் முறையாக அவர் பாகிஸ்தான் சென்றார். கனடாவை சேர்ந்த வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கடந்த 20 ஆண்டுகளாக பாகிஸ்தான் செல்லாத நிலையில் அனிதா ஆனந்த் சென்றார்.
ஒருநாள் சுற்றுப்பயணமாக பாகிஸ்தான் சென்ற அனிதா ஆனந்த் நேற்று நாடு திரும்பினார். முன்னதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் துணை பிரதமரும், அந்த நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சருமான இசாக் தார், உள்துறை அமைச்சர் மோஷின் நக்வி உள்ளிட்டவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது இருநாடுகள் இடையேயான வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு மற்றும் மேம்பாடு தொடர்பாக விரிவாக ஆலோசிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி பிராந்தியப் பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு ஆகியவை பற்றி விவாதிக்கப்பட்டது. நிதி உதவி சார்ந்த அறிவிப்புகள் மட்டுமின்றி வேளாண் வர்த்தகம், எரிசக்தி முதலீடு மற்றும் இருதரப்பு முதலீட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தம் உள்ளிட்டவைகளில் கையெழுத்தாகின.
அதுமட்டுமின்றி பாகிஸ்தானுக்கு பல நூறு கோடியை உதவியாக அள்ளி கொடுத்துள்ளார் அனிதா ஆனந்த். அதாவது பாகிஸ்தானுக்காக மொத்தம் 47 மில்லியன் டாலரை உதவியாக கனடா வழங்கும் என்று அறிவித்துள்ளார். 47 மில்லியன் டாலர் என்பது நம் நாட்டின் இந்திய ரூபாயில்ரூ. 452.68 கோடியாகும்.
இதில் ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுத் திட்டம் மூலம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மீண்டும் கல்வி பெறுவதை உறுதிசெய்ய 10 மில்லியன் டாலரும், ‘அகா கான் ஃபவுண்டேஷன் கனடா’ அமைப்புடன் இணைந்து பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் திறனை வலுப்படுத்த 15 மில்லியன் டாலரும், ஐக்கிய நாடுகள் மக்கள் தொகை நிதியம் மூலம் சுகாதாரம் மற்றும் குடும்பக் கட்டுப்பாடு சேவைகளை விரிவுபடுத்த 20 மில்லியன் டாலர் வரை நிதி உதவி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நம் நாட்டுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நீண்டகாலமாக மோதல் உள்ளது. கடந்த ஆண்டு தான் இருநாடுகள் இடையே 3 நாட்கள் போர் நடந்தது. இப்படியான சூழலில் கனடா வெளியுறவுத்துறை அமைச்சரும், இந்திய வம்சாவளியுமான அனிதா ஆனந்த் நிதி உதவி வழங்கி உள்ளது மட்டுமின்றி இருநாடுகளின் உறவை வலுப்படுத்துவது நம் நாட்டுக்கு எச்சரிக்கை மணியாக உள்ளது.

