Last Updated:
உத்தரபிரதேசம் லக்கிம்பூர் நகர் பாலிகா நகராட்சி ராணுவ வீரர்களின் வீடுகளுக்கு சொத்து வரி விலக்கு அளிக்க முடிவு செய்துள்ளது.
உத்தரபிரதேசத்தில் உள்ள லக்கிம்பூர் நகர் பாலிகா நகராட்சி பகுதியில் வசிக்கும் இந்திய ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கும், ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கும் வீட்டு வரி முழுமையாக விலக்கு அளிக்கப்படுவதாக நகர் பாலிகா நகராட்சித் தலைவர் டாக்டர் இரா. ஸ்ரீவாஸ்தவா அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ஏப்ரல் 22-ஆம் தேதி காஷ்மீர், பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் மூலம் இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது. இந்நிலையில், ராணுவ வீரர்களை போற்றி, மதிக்கும் வகையில் இந்த அறிவிப்பை உத்தரப்பிரதேசம் மாநிலம், லக்கிம்பூர் நகர் பாலிகா நகராட்சி வெளியிட்டுள்ளது.
இது குறித்து பேசிய லக்கிம்பூர் நகர் பாலிகா நகராட்சித் தலைவர் ஸ்ரீவாஸ்தவா, “நமது ஆயுதப்படைகளின் துணிச்சலான ஆண்களும் பெண்களும் மிகக் கடுமையான சூழ்நிலைகளில் முன்னணியில் விழிப்புடன் நிற்கிறார்கள். இதனால் மீதமுள்ளவர்கள் நிம்மதியாக வாழ முடிகிறது. வீட்டு வரியை தள்ளுபடி செய்வது நமது கூட்டு நன்றியின் ஒரு சிறிய அடையாளமாகும். இது அவர்களின் தைரியம், அர்ப்பணிப்பு மற்றும் தியாகத்திற்கான மரியாதை மற்றும் பாராட்டுக்கானது” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், நகராட்சியில் ராணுவ குடும்பங்கள் வசிக்கும் பகுதிகளில் அனைத்து அத்தியாவசிய குடிமை வசதிகளும் வழங்கப்படுவதை உறுதி செய்வதற்கும் உறுதியளித்துள்ளார். உள்ளூர் நிர்வாகம் இந்திய இராணுவம் மற்றும் அதன் வீரர்களுடன் ஒற்றுமையுடன் நிற்கிறது என்றும், அவர்களின் நலனை எல்லா வழிகளிலும் தொடர்ந்து ஆதரிக்கும் என்றும் டாக்டர் ஸ்ரீவஸ்தவா உறுதியளித்துள்ளார்.
இதேபோன்ற ஒரு நடவடிக்கை சமீபத்தில் ஆந்திரப் பிரதேசத்திலும் அறிவிக்கப்பட்டது. அங்கு கிராம பஞ்சாயத்து எல்லைக்குள் உள்ள இந்திய பாதுகாப்புப் படையினருக்குச் சொந்தமான வீடுகளுக்கு முழு சொத்து வரி விலக்கு அளிக்கப்பட்டது. இது தொடர்பாக அப்போது பேசியிருந்த அம்மாநிலத் துணை முதல்வர் பவன் கல்யாண், “இந்திய பாதுகாப்புப் படைகளின் அனைத்து செயலில் உள்ள பணியாளர்களும், அவர்கள் எங்கு பணியமர்த்தப்பட்டாலும், அரசின் இந்த அறிவிப்பு பொருந்தும்” என்று கூறியிருந்தார். இந்த விலக்கு ராணுவ வீரர் அல்லது அவர்களது மனைவி வசிக்கும் அல்லது கூட்டாகச் சொந்தமாக வைத்திருக்கும் ஒரு வீட்டிற்குப் பொருந்தும் என்று கூறினார் என்பது நினைவுக்கூரத்தக்கது.


