புதுடெல்லி: இந்தியப் பொருட்களுக்கான வரியை அமெரிக்கா எப்போது குறைக்கும் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் பதில் அளித்துள்ளார்.
ஜிஎஸ்டி சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து அதன் பலன்கள் நுகர்வோரைச் சென்றடைந்துள்ளதா என்பது குறித்து விளக்கம் அளிக்கும் செய்தியாளர் சந்திப்பு புதுடெல்லியில் இன்று நடைபெற்றது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல், மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோர் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்தனர்.
அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்தியப் பொருட்களுக்கு 50% வரியை அந்நாடு விதித்துள்ள நிலையில், வரி குறைப்பு எனும் நல்ல செய்தியை எப்போது எதிர்பார்க்கலாம் என செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதில் அளித்த பியூஷ் கோயல், “பேச்சுவார்த்தைகள் மிகவும் சுமுகமான சூழ்நிலையில் முன்னேற்றகரமான முறையில் நடைபெற்று வருகின்றன. தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அல்லது வர்த்தக பேச்சுவார்த்தைகளுக்கு காலக்கெடுவை நிர்ணயிக்க முடியாது. இதனை நான் பலமுறை கூறியுள்ளேன்.
இந்திய விவசாயிகள், மீனவர்கள், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் உட்பட நாட்டின் நலன்களை உறுதிப்படுத்துவதாகவே ஒப்பந்தங்கள் அமைய வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் ஒப்பந்தம் இருக்காது. தற்போதைய நிலையில் பேச்சுவார்த்தைகள் மிகச் சிறப்பாக முன்னேற்றம் கண்டு வருகின்றன. இதில், நாங்கள் ஒரு முடிவை எட்டும்போது நிச்சயம் பத்திரிகைகளுக்குத் தெரிவிப்போம்” என தெரிவித்தார்.
முன்னதாக, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசும்போது, “செப். 22 முதல் நாங்கள் மண்டலம் வாரியாக தகவல்களைப் பெற்று வருகிறோம். குறிப்பாக ஜிஎஸ்டி குறைப்பால் மக்கள் தினசரி பயன்படுத்தும் 54 பொருட்களுக்கான விலை குறைந்துள்ளதா என்பதை நாங்கள் கண்காணித்து வருகிறோம். இரு சக்கர வாகனங்கள், கார்கள், நுகர்வோர் தினசரி பயன்படுத்தும் பொருட்கள் ஆகியவற்றின் விலைகள் குறைந்துள்ளன. நுகர்வோருக்கு பலன்கள் சென்றடைந்துள்ளன.
மூன்று சக்கர வாகனங்களின் விற்பனை 79,000 என்ற எண்ணிக்கையில் இருந்து 84,000 என்ற அளவுக்கு அதிகரித்துள்ளது. அதாவது, விற்பனை 5.5% அதிகரித்துள்ளது. இரு சக்கர வாகன விற்பனை 21.60 லட்சம் யூனிட்கள் விற்பனையாகி உள்ளன. பயணிகள் வாகன விற்பனை செப்டம்பரில் 3.72 லட்சமாக இருந்தது. டிராக்டர் விற்பனை இரட்டிப்பாகி உள்ளது. நவராத்திரியின் 9 நாட்களில் வாங்குவதும், விற்பதும் பரபரப்பாக இருந்துள்ளன.
நுகர்வோர் தினசரி பயன்படுத்தும் பொருட்களின் விற்பனை செப்.22 அன்றே இரட்டிப்பாகி உள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். தொலைக்காட்சி விற்பனை 30-35% அதிகரித்துள்ளது” எனத் தெரிவித்தார்.