Last Updated:
தற்காப்புக்காக உருவாக்கப்பட்ட தொழில்நுட்பம் தவறான கைகளுக்குச் சென்றால் அது பேரழிவை ஏற்படுத்தும்
இந்தியா உற்பத்தி செய்யும் பாதுகாப்பு பொருட்கள் மீதான நம்பிக்கை உலகளவில் அதிகரித்திருப்பதாக மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
தேசிய பாதுகாப்பு குறித்த மாநாடு டெல்லியில் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது-
பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா இனி வெறும் தூதரக அறிக்கைகளை மட்டும் வெளியிடாது, நேரடியாகக் களத்தில் இறங்கிச் செயல்படும். இந்தியா தகவல் தொழில்நுட்பத்தில் (IT) முன்னேறி வரும் வேளையில், பாகிஸ்தான் சர்வதேச பயங்கரவாதத்தின் (International Terrorism – IT) மையப்புள்ளியாக மாறியுள்ளது.
இந்தியாவின் முப்படைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை வெறும் 72 மணிநேரத்தில் வெற்றிகரமாக முடித்துள்ளன. இது இந்திய ராணுவம் ஒரு உலகத்தரம் வாய்ந்த ஒருங்கிணைந்த சக்தியாக வளர்ந்துள்ளதை நிரூபித்துள்ளது.
இந்த வெற்றியின் எதிரொலியாக, இந்தியப் பாதுகாப்புப் பொருட்களின் மீதான உலக நாடுகளின் நம்பிக்கை அதிகரித்துள்ளது. இதன் விளைவாக, 2025-26 நிதியாண்டில் இந்தியாவின் பாதுகாப்பு ஏற்றுமதி 62.66% அதிகரித்து, சாதனை அளவாக ரூ. 38,424 கோடியை எட்டியுள்ளது.
நவீன காலப் போர்களில் செயற்கை நுண்ணறிவின் (AI) பங்கு முக்கியமானது. பிரம்மோஸ் ஏவுகணை முதல் உளவுத்துறை வரை AI தொழில்நுட்பம் சிறப்பாகப் பயன்படுகிறது.
ராணுவத்தில் ‘ருத்ரா’ பிரிகேட்கள், ‘பைரவ்’ பட்டாலியன்கள் போன்ற புதிய பிரிவுகள் நவீன தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில், ‘ஸ்பர்ஷ்’ (SPARSH) போர்டல் மூலம் ராணுவ வீரர்களின் ஓய்வூதியம் மற்றும் மருத்துவச் சிக்கல்கள் AI மூலம் விரைவாகத் தீர்க்கப்படுகின்றன.
AI தொழில்நுட்பத்தால் நன்மைகள் இருந்தாலும், ‘டீப்ஃபேக்’ (Deepfake) மற்றும் சைபர் தாக்குதல்கள் போன்ற ஆபத்துகளும் நிறைந்துள்ளன. தற்காப்புக்காக உருவாக்கப்பட்ட தொழில்நுட்பம் தவறான கைகளுக்குச் சென்றால் அது பேரழிவை ஏற்படுத்தும் என்பதால், மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். என்று பேசினார்.
இந்த மாநாட்டில் பாதுகாப்புத் துறைச் செயலாளர் ராஜேஷ் குமார் சிங் மற்றும் DRDO தலைவர் டாக்டர் சமீர் வி. காமத் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்திய பாதுகாப்பு பொருட்கள் மீதான நம்பிக்கை உலகளவில் அதிகரித்துள்ளது.. ராஜ்நாத் சிங் பெருமிதம்…


