கோலாலம்பூர்,
இந்திய கலாச்சார உறவுகள் மன்றம் (ஐசிசிஆர்) இந்தியா, மலேசியா உலக நாடுகளுக்கு இடையிலான கடந்த பல ஆண்டுகளாக கலாச்சார புரிதலை உருவாக்குவதில் வெற்றி பெற்றிருக்கிறது என்று மலேசியாவுக்கான இந்திய ஹைகமிஷனர் பி.என். ரெட்டி கூறினார். தன்னுடைய பல்வேறு நடவடிக்கைகள் மூலம் மலேசியாவில் இந்தியக் கலாச்சாரங்களைப் பிரபலப்படுத்துவதற்கு இந்த அமைப்பு அயராது பாடுபட்டு வருகிறது என்று இங்கு கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி புதன்கிழமை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இந்திய கலாச்சார மையத்தில் நடைபெற்ற ஐசிசி.ஆர் 76ஆவது ஆண்டு நிறைவு விழாவில் உரையாற்றிய அவர் தெரிவித்தார்.

இந்திய கலாச்சார உறவுகள் மன்றம் 1950ஆம் ஆண்டு ஏப்ரல் 9ஆம் தேதி இந்தியாவின் முதலாவது கல்வி அமைச்சரான மௌலானா அப்துல் கலாம் அஸாத் தோற்றுவித்தார். இந்தியா, உலக நாடுகளுக்கு இடையில் பரஸ்பர புரிந்துணர்வு, கலாச்சார உறவுகள் ஆகியவற்றை வலுப்படுத்துவதுதான் இதன் நோக்கமாகும். இந்த அமைப்பு தோற்றுவிக்கப்பட்டு 76ஆவது ஆண்டு விழா இங்கு கொண்டாடப்பட்டது.
2024 – 2025 காலகட்டத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இந்திய கலாச்சார மையம் நடத்திய பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகளின் தொகுப்பு அடங்கிய காணொலி இந்நிகழ்ச்சியில் ஒளிபரப்புச் செய்யப்பட்டது. அதேசமயத்தில் அதன் செய்தி ஏடு ஒன்று வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு பி.என். ரெட்டி தலைமையேற்றார்.

பல முக்கியப் பிரமுகர்களும் பிரபலங்களும் என 120க்கும் அதிகமானோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். குறிப்பாக சுத்ரா அறவாரியத்தின் தோற்றுநர் பத்மஸ்ரீ டத்தோ ரம்லி இப்ராஹிம், ஐஎன்ஏ அமைப்பைச் சேர்ந்த எஸ்.பி. நாராயணசாமி. சுருதிலயா ஞானவித்யாலயா தேசியத் தலைவர் ஸ்ரீ தாஜ்குருஜி சர்மா, நுண்கலை ஆலய தோற்றுநர்கள் – இயக்குநர்கள் திருமதி வத்ஸலா சிவதாஸ், ராதா ஷெட்டி, திருமதி” தவமலர், பத்ம நிரித்லயா கலை இயக்குநர் திருமதி வினோஸ்ரீ சங்கர், சுகம் கர்நாடிகா தலைவர் திருமதி சுஜித்ரா ஜெயசீலன், ஷேத்ரா அகாடமி தலைவர் திருமதி அப்ஷரா ராம்கோபால், தஞ்சை கமலா இந்திரா நடனப்பள்ளித் தலைவர் திருமதி இந்திரா மாணிக்கம் ஆகியோரும் அவர்களுள் அடங்குவர்.
ஐசிசிஆர் கல்வி உபகாரச் சம்பளத்தில் உயர்கல்வி பெற்ற மலேசியப் பிரஜைகளான கம்பார், யூத்தார் பல்கலைக்கழகத்தின் ஆயுர்வேத விரிவுரையாளராக இருக்கும் டாக்டர் ஸ்ரீ வர்ஷினி சங்கர், திருமதி மகேஸ்வரி முருகநாதன் ஆகியோர் தங்களுக்கு மிகவும் நெருக்கமாக இருக்கும் ஐசி.சி.ஆர் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பத்ம நிரிதலயா கலை மையத்தைச் சேர்ந்த மாணவர்களின் மோகினி ஆட்டம், ஷேத்ரா அகாடமி படைத்த பரதநாட்டியம், நுண்கலை ஆலய மாணவர்கள் படைத்த கதக் நடனம் நிகழ்ச்சிக்கு வந்திருந்தோரைப் பரவசத்தில் ஆழ்த்தியது.


