Last Updated:
“உலகில் மிகச் சில நாடுகளே இத்தகைய தனியார் முயற்சிகளை மேற்கொண்டுள்ளன” – இந்திய இளைஞர்களின் விண்வெளி பயணம் குறித்து பிரதமர் மோடி பெருமிதம்
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி உள்ள நிலையில், அதற்கு முன்னதாக நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி செய்தியாளர் சந்திப்பை நிகழ்த்தினார்.
அப்போது பேசிய பிரதமர் மோடி, “விக்ரம் – 1 ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது வரலாற்று சாதனையாக உள்ளது. இதன் மூலம் நம் நாட்டு இளைஞர்கள் நம்மை பெருமையடையச் செய்துள்ளனர். உலகில் மிகச் சில நாடுகளே இத்தகைய தனியார் முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. கடந்த பருவமழை கூட்டத்தொடருக்கு முன்பு, இந்திய இளைஞரொருவர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றடைந்திருந்தார். இப்போது தனியார் ஸ்டார்ட்-அப் நிறுவனம் சாதனை புரிந்துள்ளது. இதன்மூலம் இந்திய இளைஞர்கள் விண்வெளியில் ஒரு புதிய பயணத்தைத் தொடங்கியுள்ளனர்.
இவர்களால் இந்தியாவின் உலகளாவிய அந்தஸ்து, உலகளாவிய அங்கீகாரத்தையும் வரவேற்பையும் பெற்று வருகிறது. இது தற்செயலானது அல்ல; நம் நாட்டு இளைஞர்களின் ஆற்றலும் லட்சியங்களும் விண்வெளியைப் போலவே எல்லையற்றவை என்பதற்கான ஒரு சான்றுதான் இது. ஸ்கைரூட்டில் பணிபுரியும் நம் இளைஞர்கள் குழுவின் சராசரி வயது 28-தான். இந்த இடத்தில் நான் 56 வயதான ‘இளைஞரைப்’ பற்றிப் பேசவில்லை” எனக்கூறி, கடந்த மாதம் 56 வயதை எட்டிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை பெயர் குறிப்பிடாமல் மறைமுகமாக சாடியுள்ளார்.
#WATCH | Delhi: On the Monsoon session of Parliament, PM Narendra Modi says, “I am firmly convinced that where there are facts and logic, there is no room for a storm.”
“Positive spirit is essential for achieving the nation’s goals. Our House has very experienced Members of… pic.twitter.com/IzFWB4NoTI— ANI (@ANI) July 20, 2026
தொடர்ந்து மத்திய அரசின் சமீபத்திய உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப சாதனைகளைப் பட்டியலிட்ட பிரதமர் மோடி, ராஜஸ்தானில் உள்ள மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை நாட்டுக்கு அர்ப்பணித்துள்ளதாகவும், நாட்டின் மூன்றாவது செமிகண்டக்டர் (சிப்) உற்பத்தி ஆலையும் தொடங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். மேலும், உலகிலேயே மிகவும் மேம்பட்ட பசுமை ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் ரயிலை இந்தியா அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ரயிலில் மிகவும் சக்திவாய்ந்த என்ஜினும், மிக நீளமான ரயில் அமைப்பும் உள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும், “நாட்டின் பல்வேறு துறைகளிலும் வளர்ச்சி வேகம் அதிகரித்துள்ள இந்த நேரத்தில், நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியுள்ளது. பருவமழையும் சரி, நாடாளுமன்றத்தின் பருவமழைக் காலக் கூட்டத்தொடரும் சரி, இவை இரண்டும் சரியாக இருந்தால் நாட்டிற்கு பலன்கள் அதிகம் கிடைக்கும். இவை இரண்டும் பலனளிக்கும்போது, அது நாட்டின் நலனுக்கும் அனைத்து உயிரினங்களின் நல்வாழ்வுக்கும் வழிவகுக்கிறது. அதனால்தான், பருவமழையும் பருவமழைக் காலக் கூட்டத்தொடரும் பயனுள்ளதாக அமைய வேண்டும் என்றும் நாம் நினைக்கிறோம். இதை மனதில் வைத்து, நாடாளுமன்றத்தில் ஆக்கபூர்வமான விவாதம் நடைபெற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். அதற்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்றார்.
Speaking at the start of the Monsoon Session of Parliament. May this session witness productive discussions that strengthen India’s development journey. https://t.co/v25Vg62apy
— Narendra Modi (@narendramodi) July 20, 2026
இன்று தொடங்கும் நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரில், 6 முக்கிய மசோதாக்களை மத்திய அரசு அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக, அந்நியப் பங்களிப்பு திருத்த மசோதா, வருமான வரி மசோதா, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கையை 33 இல் இருந்து 37 ஆக உயர்த்தும் மசோதா, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் மேம்பாட்டு திருத்த மசோதாவையும் மத்திய அரசு கொண்டு வர உள்ளதாக கூறப்படுகிறது.
Jul 20, 2026 11:25 AM IST
“இந்திய இளைஞர்கள் விண்வெளியில் ஒரு புதிய பயணத்தைத் தொடங்கியுள்ளனர்…” – பிரதமர் மோடி பெருமிதம்!


