Last Updated:
இங்கிலாந்தில் வால்சால் பகுதியில் இந்திய-வம்சாவளியைச் சேர்ந்த 20 வயது பெண் இனவெறித் தாக்குதலில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தில் இந்திய-வம்சாவளியைச் சேர்ந்த இளம் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தில் உள்ள வால்சாலில் குறிப்பிட்ட அளவில் இந்தியர்கள் வசித்து வருகின்றனர். இதில் இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட ஒரு குடும்பத்தினர் பார்க் ஹால் பகுதியில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் 20 வயது பெண்ணை, இளைஞர் ஒருவர் இன ரீதியாக தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர், அவரை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியோடியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பாக மேற்கு மிட்லேண்ட்ஸ் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இதனிடையே, சம்பவ இடத்தில் இருந்து சென்ற சந்தேக நபர் தொடர்பான சிசிடிவி காட்சிகளையும் போலீசார் வெளியிட்டுள்ளனர்.
அதில், உள்ள நபரின் அடையாளம் தெரிந்தால் பொதுமக்கள் உடனே தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர். அண்மைக் காலமாக அமெரிக்கா, ஆஸ்திரேலியாவை தொடர்ந்து இங்கிலாந்திலும் இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினருக்கு எதிராக இனவெறித் தாக்குதல் அதிகரித்துள்ளாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதில், இங்கிலாந்தில் கடந்த மாதம் ஓல்டுபரி பகுதியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சீக்கிய பெண் ஒருவர், பட்டப்பகலில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.
இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் வால்சால் பகுதியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 20 வயது பெண்ணை, இனவெறித் தாக்குதல் நடத்தி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் குற்றவாளியை விரைந்து கைது செய்து, அவருக்கு கடுமையான தண்டணை வழங்க வேண்டும் என்று இந்தியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இங்கிலாந்தில் தொடர்ந்து இந்தியர்களுக்கு எதிராக கட்டவிழ்த்துப்படும் இனவெறித் தாக்குதல் உட்பட அடக்குமுறைக்கு முடிவு கட்டப்படவேண்டும் என இந்திய வம்சாவளியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
October 28, 2025 4:01 PM IST
இந்திய இளம்பெண்ணை இன ரீதியாக தாக்கி பாலியல் வன்கொடுமை.. இங்கிலாந்தில் அடுத்த அதிர்ச்சி!


