லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி மற்றும் 5-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 224 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து விளையாடிய இங்கிலாந்து அணி 8 விக்கெட்களை இழந்து 242 ரன்கள் எடுத்து முன்னிலை பெற்றது.
லண்டன் கெனிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி மழையால் பாதிக்கப்பட்ட முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 64 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 204 ரன்கள் எடுத்தது. கருண் நாயர் 52, வாஷிங்டன் சுந்தர் 19 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
நேற்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய இந்திய அணி மேற்கொண்டு 20 ரன்களை சேர்ப்பதற்குள் எஞ்சிய 4 விக்கெட்களையும் தாரை வார்த்தது. கருண் நாயர் 109 பந்துகளில், 8 பவுண்டரிகளுடன் 57 ரன்கள் எடுத்த நிலையில் ஜோஷ் டங்கின் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் வெளியேறினார். வாஷிங்டன் சுந்தர் 55 பந்துகளில், 3 பவுண்டரிகளுடன் 26 ரன்கள் எடுத்த நிலையில் கஸ் அட்கின்சன் வீசிய ஷாட் பிட்ச் பந்தை லெக் திசையில் தூக்கி அடித்த போது டீப் ஸ்கொயர் திசையில் ஜேமி ஓவர்டனிடம் கேட்ச் ஆனது.
இவர்களை தொடர்ந்து முகமது சிராஜ் 0, பிரசித் கிருஷ்ணா 0 ரன்களில் கஸ் அட்கின்சன் பந்தில் நடையை கட்ட இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 69.4 ஓவர்களில் 224 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி 2-வது நாள் ஆட்டத்தில் 34 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட நிலையில் கடைசி 4 விக்கெட்களையும் பறிகொடுத்தது. இங்கிலாந்து அணி தரப்பில் கஸ் அட்கின்சன் 5, ஜோஷ் டங்க் 3 விக்கெட்களையும், கிறிஸ் வோக்ஸ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இதையடுத்து பேட்டிங்கை தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு ஸாக் கிராவ்லி, பென் டக்கெட் ஜோடி பாஸ்பால் முறையில் அதிரடி தொடக்கம் கொடுத்தனர். ஆகாஷ் தீப் வீசிய 4-வது ஓவரில் பென் டக்கெட் ரிவர்ஸ் ரேம்ப் ஷாட்டில் சிக்ஸர் விளாசி மிரட்டினார். தொடர்ந்து ஆகாஷ் தீப் வீசிய 6-வது ஓவரில் பென் டக்கெட் 3 பவுண்டரிகள் அடித்தார். முகமது சிராஜ் வீசிய அடுத்த ஓவரில் ரேம்ப் ஷாட்டில் விக்கெட் கீப்பரின் பின்புறம் சிக்ஸர் விளாசினார்.
மறுமுனையில் ஸாக் கிராவ் ஓவருக்கு 2 பவுண்டரிகளை விரட்டி இந்திய அணியின் பந்து வீச்சாளர்களுக்கு அழுத்தம் கொடுத்தார். மட்டையை சுழற்றிய பென் டக்கெட் 38 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 43 ரன்கள் விளாசிய நிலையில் ஆகாஷ் தீப் பந்தில் ஆட்டமிழந்தார். ஆஃப் ஸ்டெம்புக்கு வெளியே ஆகாஷ் தீப் வீசிய பந்தை பென் டக்கெட் ஸ்கூப் ஷாட் விளையாட முயன்றார். ஆனால் பந்து மட்டையில் உரசியபடி விக்கெட் கீப்பர் துருவ் ஜூரெலிடம் கேட்ச் ஆனது. முதல் விக்கெட்டுக்கு பென் டக்கெட், ஸாக் கிராவ்லி ஜோடி 12.5 ஓவர்களில் 92 ரன்கள் குவித்தது.
இதையடுத்து கேப்டன் ஆலி போப் களமிங்கினார். மட்டையை சுழற்றிய ஸாக் கிராவ்லி 42 பந்துகளில், 12 பவுண்டரிகளுடன் 19-வது அரை சதத்தை கடந்தார். மதிய உணவு இடைவேளையில் இங்கிலாந்து அணி 16 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 109 ரன்கள் எடுத்திருந்தது. ஸாக் கிராவ்லி 52, ஆலி போப் 12 ரன்கள் சேர்த்திருந்தனர். உணவு இடைவேளைக்கு பின்னர் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் ஸ்டெம்புகளுக்கு குறிவைத்தும், சிறந்த நீளத்திலும் பந்துகளை தொடர்ச்சியாக வீசி அழுத்தம் கொடுத்தனர்.
ஸாக் கிராவ்லி 57 பந்துகளில், 14 பவுண்டரிகளுடன் 64 ரன்கள் எடுத்த நிலையில் பிரசித் கிருஷ்ணா பந்தில் புல்ஷாட் விளையாடிய போது மிட்விக்கெட் திசையில் ஜடேஜாவிடம் கேட்ச் ஆனது. இதன் பின்னர் இங்கிலாந்து அணி சீரான இடைவேளையில் விக்கெட்களை இழந்தது. ஆலி போப் 44 பந்துகளில், 4 பவுண்டரிகளுடன் 22 ரன்களும், ஜோ ரூட் 45 பந்துகளில், 6 பவுண்டரிகளுடன் 29 ரன்களும், ஜேக்கப் பெத்தேல் 6 ரன்களும் எடுத்த நிலையில் முகமது சிராஜ் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தனர்.
விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ஜேமி ஸ்மித் 8 ரன்கள் எடுத்த நிலையில் பிரசித் கிருஷ்ணா பேக் ஆஃப்தி லெந்த்தில் கூடுதல் பவுன்ஸுடன் வீசிய பந்தை ஸ்கொயர் டிரைவ் செய்ய முயன்றார். ஆனால் பந்து மட்டை விளிம்பில் பட்டு 2-வது சிலிப் திசையில் நின்ற கே.எல்.ராகுலிடம் கேட்ச் ஆனது. இதை தொடர்ந்து களமிறங்கிய ஜேமி ஓவர்டன் ரன் ஏதும் எடுக்காத நிலையில் பிரசித் கிருஷ்ணா பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். தேநீர் இடைவேளையில் இங்கிலாந்து அணி 42.5 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 215 ரன்கள் எடுத்திருந்தது. ஹாரி புரூக் 33 ரன்களுடன் களத்தில் இருந்தார். தேநீர் இடைவேளைக்கு பின்னர் ஹாரி புரூக்குடன், கஸ் அட்கின்சன் இணைய இங்கிலாந்து அணி தொடர்ந்து விளையாடியது. 46-வது ஓவரில் இங்கிலாந்து அணி 224 ரன்களை கடந்து முன்னிலை பெறத் தொடங்கியது.
கஸ் அட்கின்சன் 11 ரன்களில் பிரசித் கிருஷ்ணா பந்தை ஷார்ட் பாலை தூக்கி அடிக்க முயன்ற போது மிட் ஆன் திசையில் நின்ற ஆகாஷ் தீப்பிடம் கேட்ச் ஆனது. இதன் பின்னர் ஜோஷ் டங்க் களமிறங்க ஹாரி புரூக் அதிரடியாக விளையாடினார். முகமது சிராஜ் வீசிய 47.2 ஓவரில் ஸ்வீப் ஷாட்டில் சிக்ஸர் விளாசினார். இங்கிலாந்து அணி 48 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 242 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை காரணமாக ஆட்டம் தடைபட்டது. அப்போது ஹாரி புரூக் 48 ரன்களும், ஜோஷ் டங்க் ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர். இந்திய அணி சார்பில் பிரசித் கிருஷ்ணா 4, முகமது சிராஜ் 3 விக்கெட்களை வீழ்த்திஇருந்தனர்.
கிறிஸ் வோக்ஸ் விலகல்: லண்டனில் நடைபெற்று வரும் இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் 57-வது ஓவரில் பீல்டிங் செய்தபோது இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான கிறிஸ் வோக்ஸூக்கு இடது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இந்நிலையில் கிறிஸ் வோக்ஸ் இந்த போட்டியில் இருந்து விலகி உள்ளார்.