Last Updated:
அணியின் வெற்றிக்கு தனிப்பட்ட ஒருவரின் திறமையே முழுக் காரணமாக இருக்க முடியாது.
இந்திய அணி வெற்றி பெறுவதற்கு பும்ரா அணியில் இடம்பெற வேண்டும் என்கிற அவசியம் இல்லை என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் கிரேக் சேப்பல் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. மூன்று போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இங்கிலாந்து அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்று இந்த தொடரில் 2-க்கு 1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
மீதமுள்ள இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணி தொடரை கைப்பற்றும். மான்செஸ்டர் நகரில் வரும் 23ஆம் தேதி நான்காவது டெஸ்ட் போட்டி தொடங்க உள்ளது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றி விடும். இதனால் இந்திய அணிக்கு அடுத்த 2 போட்டிகளும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
இதற்கிடையே இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ஜஸ்பிரித் பும்ரா நான்காவது டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார் என்றும் அவர் கடைசி போட்டியில் மட்டுமே களம் இறங்குவார் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் கிரேக் சேப்பல் பும்ரா குறித்து கூறியதாவது-
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி 2 டெஸ்ட் போட்டிகளில் பும்ரா விளையாடுவது குறித்து பலரும் விவாதித்து வருகிறார்கள். அவர் விளையாடுவாரா இல்லையா என்பது உறுதி செய்யப்படவில்லை. என்னைப் பொருத்தளவில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு அணியில் பும்ரா இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை என்று கருதுகிறேன். ஏனென்றால் அவர் அணியில் இல்லாமலேயே இந்திய அணி 2 ஆவது டெஸ்டில் வெற்றி பெற்றிருக்கிறது.
ஏனென்றால் அணியின் வெற்றிக்கு தனிப்பட்ட ஒருவரின் திறமையே முழுக் காரணமாக இருக்க முடியாது. கூட்டு முயற்சியால் மட்டுமே வெற்றி சாத்தியப்படும். ஒவ்வொரு வீரரும் தங்களுக்கு அளிக்கப்பட்ட பொறுப்பை சரியாக செய்து விட்டால் அணி பெரும்பாலும் வெற்றி பெற்று விடும். அதேநேரம் ஒவ்வொரு வீரர்களும் தாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிய தெளிவுடனும், தன்னம்பிக்கையுடனும் இருப்பதை கேப்டன் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.
July 19, 2025 9:40 PM IST


