உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் அமெரிக்கா அணி செய்த தவறால், இந்திய அணிக்கு 5 ரன்கள் கொடுக்கப்பட்டது, ரசிகர்களிடையே பேசுபொருளாகியுள்ளது.
நியூயார்க்கின் நாசோ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் அமெரிக்க அணிக்கு எதிரான போட்டியில், டாஸ் வென்ற இந்தியா முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த அமெரிக்க அணி, 20 ஓவர்களின் முடிவில், 110 ரன்களை மட்டுமே எடுத்தது. இதையடுத்து 111 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் களம் இறங்கினர்.
18.2 ஓவர்களில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது. கேப்டன் ரோஹித் சர்மா 3 ரன்களும், விராட் கோலி ரன் ஏதும் எடுக்காமலும், ரிஷப் பண்ட் 18 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். ஆனால் அரைசதமடித்து சூர்யகுமார் யாதவும், மறுமுனையில் சிவம் துபேவும் பொறுப்பாக விளையாடி இந்திய அணியை வெற்றிபாதைக்கு அழைத்து சென்றனர்.
இதையும் படிக்க:
அமெரிக்காவை 7 விக். வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி… சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற்றம்
இந்த போட்டியில், 15ஆவது ஓவருக்கு பிறகு, அமெரிக்கா அணி தவறு செய்ததால், இந்திய அணிக்கு 5 ரன்கள் கொடுக்கப்பட்டது கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஐசிசியின் புதிய விதிமுறைகளின்படி, ஒரு ஓவர் முடிந்த பிறகு 60 விநாடிகளுக்குள் அடுத்த ஓவரை தொடங்க வேண்டும். 2 முறைகளுக்கு மேல் இந்த விதியை மீறினால், பேட்டிங் செய்யும் அணிக்கு 5 ரன்கள் பெனால்டி கொடுக்கப்படும்.
அமெரிக்கா அணியின் கேப்டன் ஆரோன் ஜோன்ஸ்க்கு 2 முறை அம்பையர்கள் எச்சரிக்கை கொடுத்தும், மூன்றாவது முறையும் அமெரிக்க அணி அதே தவறை செய்தது. இதனால் இந்திய அணிக்கு 5 ரன்கள் பெனால்டியாக வழங்கப்பட்டது. 30 பந்துகளில் 35 ரன்கள் எடுக்க வேண்டும் என்று பரபரப்பாக சென்று கொண்டிருந்த ஆட்டத்தில், இந்திய அணிக்கு இந்த 5 ரன்கள் கிடைத்தது சற்று நிம்மதியை கொடுத்தது. அதுவரை 36 பந்துகளில் 29 ரன்களை மட்டுமே எடுத்திருந்த சூர்ய குமார் யாதவ், அடுத்த 13 பந்துகளில் 29 ரன்களை எடுத்து இந்திய அணியை வெற்றிபெற செய்தார்.
ஐசிசியின் புதிய விதிகள் ஆண்கள் ஓடிஐ போட்டிகள் மற்றும் சர்வதேச டி20 போட்டிகளிலும் கடந்த ஜூன் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)