Last Updated:
நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை இழந்த நிலையில், 20 ஓவர் தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி இன்று களமிறங்குகிறது.
நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை இழந்த நிலையில், 20 ஓவர் தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி இன்று களமிறங்குகிறது.
இந்தியா- நியூசிலாந்து இடையேயான 20 ஓவர் தொடர் இன்று தொடங்கும் நிலையில், மூன்றாவது வீரராக இஷான் கிஷன் களமிறங்குவார் என்று கேப்டன் சூர்யகுமார் யாதவ் அறிவித்துள்ளார். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி, 3 போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடர் மற்றும் 5 போட்டிகளைக் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது.
இதன் ஒரு நாள் தொடரில் 2-க்கு ஒன்று என்ற கணக்கில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்றது. இதனைத் தொடர்ந்து, 20 ஓவர் தொடர் இன்று தொடங்குகிறது. மகாராஷ்டிர மாநிலம், நாக்பூர் மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு முதல் போட்டி தொடங்க உள்ளது.
இந்தத் தொடருக்கான முதல் 3 போட்டிகளிலிருந்து வயிற்றுப் பிரச்சினை காரணமாக திலக் வர்மா விலகிய நிலையில், மூன்றாவது வீரராக இஷான் கிஷன் களமிறங்குவார் என்று கேப்டன் சூர்யகுமார் யாதவ் அறிவித்துள்ளார்.
2 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணிக்கு இஷான் கிஷன் திரும்பியுள்ளார். மேலும், அணியில் ரிங்கு சிங்கும் இடம்பெற்றுள்ளார். காயம் காரணமாக வாஷிங்டன் சுந்தர் விலகிய நிலையில், அவருக்குப் பதிலாக ரவி பிஷ்னோய் சேர்க்கப்பட்டுள்ளார்.
பந்துவீச்சு பிரிவில் ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்கரவர்த்தி, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதனிடையே, மிச்செல் சான்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணி, இந்திய மண்ணில் முதல்முறையாக ஒரு நாள் தொடரை வென்ற உற்சாகத்துடன் களமிறங்குகிறது. மைக்கேல் பிரேஸ்வெல், ஆடம் மில்னே ஆகியோர் காயமடைந்திருப்பது அந்த அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.


