Last Updated:
டெல்லி வந்தடைந்த தென்கொரிய அதிபருக்கு இன்று காலை குடியரசுத் தலைவர் மாளிகையில் பாரம்பரிய முறைப்படி சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
தென்கொரிய அதிபர் லீ ஜே-மியுங் மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள நிகழ்வு, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஒரு புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் பதவியேற்ற பிறகு, அதிபர் லீ இந்தியாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். சுமார் 8 ஆண்டுகளுக்குப் பிறகு தென்கொரிய அதிபர் ஒருவர் இந்தியா வருவது இதுவே முதல்முறை என்பதால், இந்தச் சந்திப்பு சர்வதேச அளவில் பெரும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
டெல்லி வந்தடைந்த தென்கொரிய அதிபருக்கு இன்று காலை குடியரசுத் தலைவர் மாளிகையில் பாரம்பரிய முறைப்படி சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ராஜ்காட்டிற்குச் சென்று மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் அதிபர் லீ மரியாதை செலுத்தினார். இந்தப் பயணத்தின் மிக முக்கியமான நிகழ்வாக, பிரதமர் நரேந்திர மோடியுடன் ஹைதராபாத் இல்லத்தில் இருதரப்பு உச்சிமாநாடு நடைபெறுகிறது.
இந்த சந்திப்பின்போது, பாதுகாப்பு, தொழில்நுட்பம், எரிசக்தி குறிப்பாக, செமிகண்டக்டர் தயாரிப்பு மற்றும் பசுமை எரிசக்தி ஆகிய துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்படப் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. இந்தியாவின் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ், தென்கொரியாவின் மேம்பட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திப் பாதுகாப்புத் தளவாடங்கள் உற்பத்தியை அதிகரிப்பது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளன.
President Droupadi Murmu accorded a ceremonial welcome to H.E. Lee Jae Myung, President of the Republic of Korea at Rashtrapati Bhavan. pic.twitter.com/zpLs1ChNlX
— President of India (@rashtrapatibhvn) April 20, 2026
மேலும், இரு நாடுகளுக்கு இடையிலான பொருளாதார உறவை வலுப்படுத்தும் வகையில் ‘விரிவான பொருளாதாரக் கூட்டாண்மை ஒப்பந்தத்தை’ மேம்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்படவுள்ளது.
இந்தியா – தென்கொரியா மெகா கூட்டணி! செமி கண்டக்டர். பசுமை எரிசக்தி, தொழில்நுட்ப துறைகளில் புதிய ஒப்பந்தங்கள்


