International
oi-Vigneshkumar
காத்மாண்டு: நேபாளத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட பயங்கர வெள்ளத்தால் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், பருவநிலை மாற்றத்தால் ஏற்பட்ட இழப்புகளுக்கு அமெரிக்கா, இந்தியா, சீனா ஆகிய அதிகளவு கிரீன் ஹவுஸ் வாயுக்களை வெளியிடும் நாடுகளிடம் இருந்து இழப்பீடு கோர நேபாளம் முடிவு செய்துள்ளது. இதை வெறும் நிதியுதவியாக பார்க்காமல், தார்மீக பொறுப்பாக பார்க்க வேண்டும் என நேபாள வெளியுறவுத்துறை அமைச்சர் ஷிஷிர் கானல் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி போட்கோஷி ஆற்று பகுதியில் ஏற்பட்ட மிக பெரிய வெள்ளத்தில் அங்குள்ள கிராமங்கள் அடித்துச் செல்லப்பட்டன. உயரமான மலைப்பகுதியில் ஏற்பட்ட பனிப்பாறை சரிவை தொடர்ந்து திடீர் ஏரி உருவானது. அந்த ஏரி எதிர்பாராத நேரத்தில் திடீரென உடைந்த நிலையில், பாறைகள் மற்றும் குப்பைகள் கலந்த வெள்ளம் ஆற்றில் பெருக்கெடுத்து ஓடியதாக கூறப்படுகிறது. இதுவே பேரழிப்புக்கு காரணமாகும்.

நேபாள பேரழிவு
இதுவரை 1,100க்கும் மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், சுமார் 4,500 பேர் இன்னும் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. நேபாளத்தில் ஏற்பட்ட இந்த பேரழிவுக்கு பருவநிலை மாற்றமே முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.
இதற்கு அதிகளவில் கிரீன் ஹவுஸ் வாயுக்களை வெளியிடும் நாடுகளே பொறுப்பு என கூறியுள்ள நேபாள அரசு, இதற்காக அமெரிக்கா, இந்தியா, சீனா ஆகிய கிரீன் ஹவுஸ் வாயுக்களை அதிகம் வெளியிடும் நாடுகளிடம் இழப்பீடு பெற உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக நேபாள வெளியுறவுத்துறை அமைச்சர் ஷிஷிர் கானல் கூறுகையில், “பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை சர்வதேச நாடுகள் உதவி என்பதில் இருந்து இழப்பீடு என்ற நிலைக்கு மாற்றி அணுக வேண்டும்.
உலக நாடுகள்
நாங்கள் உருவாக்காத நெருக்கடிக்கு நாங்கள் மிக பெரிய விலையை செலுத்துகிறோம். பனிப்பாறைகள் வேகமாக உருகுவதும் இது போன்ற பேரழிவு தரும் மலை வெள்ளங்களும் பருவநிலை மாற்றத்தின் நேரடி விளைவுகள். நேபாளம் மிகக் குறைந்த அளவிலேயே கிரீன் ஹவுஸ் வாயுக்களை வெளியிடும் நாடாக இருந்தாலும், புவி வெப்பமயமாதலின் விளைவுகளை அளவுக்கு அதிகமாக நாங்கள் எதிர்கொண்டு வருகிறோம்.
அமெரிக்கா, சீனா, இந்தியா
உலகிலேயே அதிகளவில் கிரீன் ஹவுஸ் வாயுக்களை வெளியிடும் நாடாக சீனா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும், இந்தியா மூன்றாவது இடத்திலும் இருக்கிறது. இந்த நாடுகளே காலநிலை மாற்றத்திற்கு பொறுப்பேற்க வேண்டும். மேலும், பருவநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கான இழப்புகளை ஈடு செய்யும் விவகாரத்தை சர்வதேச அமைப்புகளில் எழுப்புவோம்
இமயமலைப் பகுதியில் உள்ள பனிப்பாறைகள் தொடர்ந்து உருகினால், தெற்காசியாவின் மிக முக்கியமான ஆறுகள் பாதிக்கப்படும். கங்கை மற்றும் திரிசூலி உள்ளிட்ட ஆறுகளை நம்பியுள்ள தெற்காசியாவில் 200 கோடிக்கும் அதிகமான மக்களின் நீர் பாதுகாப்பு பாதிக்கப்படலாம். இது நேபாளம் மட்டும் எதிர்கொள்ளும் பிரச்சினை இல்லை. ஒட்டுமொத்த தெற்காசிய நாகரிகத்திற்கான போராட்டம்” என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்தியாவின் நிலைப்பாடு என்ன?
பருவநிலை மாற்றத்திற்கு கிரீன் ஹவுஸ் வாயு தான் முக்கிய காரணம் என்பதை இந்தியா ஒப்புக்கொள்கிறது. இருப்பினும், ஒட்டுமொத்தமாக நாட்டின் கிரீன் ஹவுஸ் ரிலீஸை கணக்கிட கூடாது. மாறாக தனிநபர் விகிதத்தில் கணக்கிட வேண்டும் என்கிறார். அதாவது மொத்தமாக ஒரு நாட்டின் கிரீன் ஹவுஸ் வாயு என கணக்கிடா கூடாது. மாறாக அதை மக்கள் தொகையை கொண்டு வகுக்க வேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடு.
அப்படி வகுத்தால் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளே முன்னிலையில் இருக்கும். ஐரோப்பிய நாடுகளில் மக்கள் தொகை குறைவாக இருப்பதால் அதன் கார்பன் எமிஷன் குறைவு போல தோன்றும். ஆனால், இந்தியாவில் இருக்கும் ஒருவரை காட்டிலும் பல மடங்கு கிரீன் ஹவுஸ் வாயு ரிலிஸூக்கு ஐரோப்பாவை சேர்ந்த ஒருவர் காரணமாக இருப்பார். எனவே, அதையும் கருத்தில் கொண்டு பருவநிலை மாற்றத்திற்கான பொறுப்புகளை நிர்ணயிக்கப்பட வேண்டும் என்றும் இந்தியா கூறி வருகிறது.



