Last Updated:
ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, புதிய குடியரசு துணைத் தலைவரைத் தேர்வுசெய்வதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்தியா கூட்டணி சார்பில் சுதர்சன் ரெட்டி அறிவிக்கப்பட்டார்.
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் இந்தியா கூட்டணி வேட்பாளராக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்ஷன் ரெட்டி அறிவிக்கப்பட்டுள்ளார்.
குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர் தனது பதவியை கடந்த மாதம் 21ஆம் தேதி ராஜினாமா செய்தார். இதையடுத்து, புதிய குடியரசு துணைத் தலைவரை தேர்வுசெய்வதற்கான தேர்தலை அறிவித்துள்ள தேர்தல் ஆணையம், போட்டி இருந்தால், அடுத்த மாதம் 9 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவித்துள்ளது.
குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 7 ஆம் தேதி தொடங்கியுள்ளது. இந்தத் தேர்தலில் பாஜக கூட்டணிக் கட்சிகள் சார்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவரும், மகாராஷ்டிர மாநில ஆளுநருமான சி.பி.ராதாகிருஷ்ணன் களமிறக்கப்பட்டுள்ளார்.
‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகள் சார்பில் வேட்பாளரை நிறுத்துவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வந்தது. இதன் ஒரு பகுதியாக டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில், காங்கிரஸ் கட்சி அகில இந்தியத் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்நிலையில் இந்தியா கூட்டணி சார்பில் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி அறிவிக்கப்பட்டுள்ளார்.
1946-ம் ஆண்டு ஆந்திராவில் பிறந்த சுதர்சன் ரெட்டி, ஓஸ்மானியா பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்று 1971ஆம் ஆண்டில் வழக்கறிஞராக பதிவு செய்தார். தொடர்ந்து 1988- 90 களில் ஆந்திர அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து 1995-ம் ஆண்டில் ஆந்திராவின் உயர்நீதிமன்ற நீதிபதியானார்.
2005-ம் ஆண்டில் கவுகாத்தி உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும், 2007ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை அவர் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாகவும் பதவி வகித்துள்ளார்.
அதேநேரம் இதுவரை எந்த அரசியல் கட்சியையும் சாரதவராகவும் எந்த தேர்தலிலும் போட்டியிட்டது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Delhi,Delhi,Delhi
August 19, 2025 1:45 PM IST


