இந்தியா மற்றும் சீனாவை “நரகக் குழி” (Hellholes) என்று அமெரிக்க வானொலி தொகுப்பாளர் மைக்கேல் சாவேஜ் வர்ணித்து, நான்கு பக்கங்கள் கொண்ட ஒரு நீண்ட கட்டுரையைத் தனது சமூக ஊடகத்தில் பதிவிட்டிருந்தார்.
இது இந்தியர்கள் மற்றும் ஆசியர்களை இழிவுபடுத்தும் விதமாக இருந்தது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அந்தப் பாட்காஸ்டரின் இனவெறி கலந்த அந்தப் பதிவை தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் ரீபோஸ்ட் செய்தார். இது விவகாரம் உலக அளவில் விவாதமாக்கியிருக்கிறது.

ட்ரம்பின் இந்தப் பதிவிற்கு இந்து அமெரிக்க அறக்கட்டளை கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “இது வெறுப்பையும் இனவெறியையும் தூண்டும் செயல். அதிபர் பதவியில் இருப்பவர் இப்படிச் செய்வது ஆசிய அமெரிக்கர்களை ஆபத்தில் ஆழ்த்தும். எனவே அந்தப் பதிவை நீக்க வேண்டும்” என்றும் வலியுறுத்தினர்.
விவகாரம் விஸ்வரூபம் எடுப்பதைக் கண்ட அமெரிக்கத் தூதரகம், நிலைமையைச் சமாளிக்க ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில், “அமெரிக்காவின் நல்ல நண்பர் பிரதமர் மோடி தலைமையில் இந்தியா ஒரு ‘சிறந்த’ நாடு என ட்ரம்ப் நம்புகிறார்” என விளக்கமளித்தது.
அமெரிக்கத் தூதரகத்தின் அறிக்கை வந்த சில மணி நேரங்களிலேயே, இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெயஸ்வால், “அந்தக் கருத்துக்களையும், அதற்குப் பதிலளிக்கும் விதமாக அமெரிக்கத் தூதரகம் வெளியிட்ட அறிக்கையையும் நாங்கள் பார்த்தோம். அந்தக் கருத்துக்கள் வெளிப்படையாகவே அறியாமையின் அடிப்படையிலானவை, பொருத்தமற்றவை மற்றும் மோசமான ரசனையைக் கொண்டவை.
பரஸ்பர மரியாதை மற்றும் பகிரப்பட்ட நலன்களின் அடிப்படையில் நீண்ட காலமாக இருந்து வரும் இந்தியா-அமெரிக்க உறவின் யதார்த்தத்தை அவை நிச்சயமாகப் பிரதிபலிக்கவில்லை,” எனக் கூறினார்.

