இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் உலகக்கோப்பை டி20 தொடரின் 2 ஆவது அரையிறுதி போட்டி வெஸ்ட் இண்டீசின் கயானாவில் இன்று நடைபெறவிருந்தது. ஆனால் அவ்வப்போது மழை குறுக்கிட்டு வருவதால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்த போட்டி நடக்காமல் போனால் சூப்பர் 8 சுற்றில் முதலிடம் பிடித்த அணி என்ற அடிப்படையில் இந்தியா நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.
உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அமெரிக்காவில் நடைபெற்ற போட்டிகள் நிறைவு பெற்று, தற்போது வெஸ்ட் இண்டீஸில் சூப்பர் 8 சுற்றுகள் நிறைவு பெற்று அரையிறுதி சுற்று இன்று தொடங்கின.
டிரினிடாடில் நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை தென்னாப்பிரிக்கா 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதையடுத்து, இரவு 8 மணிக்கு 2 ஆவது அரையிறுதியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் கயானா மைதானத்தில் மோதுவதாக இருந்தது.
இருப்பினும், மழை அவ்வப்போது குறுக்கிட்டு வருவதால் ஆடுகளம் ஈரப்பதம் அடைந்துள்ளது. இதனால் டாஸ் போடுவதை நடுவர்கள் தாமதப்படுத்தியுள்ளனர்.
உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் முழுவதுமாக இந்திய அணி ஒரு போட்டியில் கூட தோல்வியடையவில்லை. இதே மன எழுச்சியோடு இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை இந்தியா வீழ்த்தும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் உள்ளனர்.
நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி கோப்பையை மீண்டும் வெல்ல முனைப்பு காட்டி வருகிறது. அந்த அணியில் பிலிப் சால்ட், ஜாஸ் பட்லர் ஆகியோர் தொடக்க வீரராக களம் இறங்கி அணிக்கு நல்ல ஸ்கோரை எடுத்துக் கொடுத்துள்ளனர். ஜானி பேர்ஸ்டா, ஹாரி ப்ரூக், மொயின் அலி உள்ளிட்ட பேட்ஸ்மேன்கள் இந்திய களங்களில் விளையாடிய அனுபவம் கொண்டவர்கள்.
இதேபோன்று பவுலிங்கில் அடில் ரஷீத், ஜோப்ரா ஆர்ச்சர், கிரிஸ் ஜோடன், ரீஸ் டாப்ளே ஆகியோரும் ஐபிஎல் தொடர்களில் விளையாடிய அனுபவம் மிக்கவர்கள் என்பதால் இந்திய அணிக்கு அவர்கள் கடும் சவாலாக இருப்பார்கள்.
.
&w=750&resize=750,375&ssl=1)
