இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இங்கிலாந்து சென்றுள்ளார். லண்டன் விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மரை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார்.
இந்நிலையில், இந்தியா – இங்கிலாந்து இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருநாட்டு பிரதமர்கள் முன்னிலையில் கையெழுத்தானது.
இதைத் தொடர்ந்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்த ஒப்பந்தத்தால் இருநாடுகளுக்கும் அதிக பலன் கிடைக்கும் என்றார். இந்த ஒப்பந்தம் மூலம் இந்திய பொருட்களுக்கு இங்கிலாந்தில் நல்ல விலை கிடைக்கும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
இந்த ஒப்பந்தம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில், “இந்திய ஆடைகள், காலணிகள், ரத்தின நகைகள் மற்றும் பொறியியல் பொருட்கள் அனைத்தும் இப்போது இங்கிலாந்து சந்தையை எளிதில் அடையவுள்ளன. வேளாண் பொருட்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களுக்கும் புதிய வாய்ப்புகள் உருவாகின்றன. இதனால், நமது மக்கள், குறிப்பாக விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள், மீனவர்கள் மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் (MSMEs) பெரிதும் பயன்பெற உள்ளன.
இந்த ஒப்பந்தம் செயல்படுத்தல் எளிமையை மேம்படுத்தி, வணிகச் செலவுகளைக் குறைத்து, வணிக நம்பிக்கையை அதிகரிக்கும். முதலீட்டுத் தொடர்புகளுக்கும் புதிய ஊக்கம் கிடைக்கும்.
இதற்கு மேலாக, நமது விரிவான மூலதனக் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த ‘விசன் 2035’ எனும் திட்டத்தையும் வெளியிட்டுள்ளோம். இதில் பாதுகாப்பு, கல்வி, மக்கள் தொடர்பு, செமிக்கண்டக்டர் தொழில் மற்றும் நிலைத்த வளர்ச்சி போன்ற துறைகள் முக்கியப் பங்கு வகிக்கவுள்ளன.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைக் கடுமையாகக் கண்டித்த பிரதமர் கியர் ஸ்டார்மர் அவர்களுக்கு எனது நன்றிகள். தீவிரவாதச் சிந்தனைகள் ஜனநாயக சுதந்திரங்களைத் தவறாகப் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்பதில் நாங்கள் இருவரும் உடன்படுகிறோம். ஜனநாயக சுதந்திரங்களைப் பயன்படுத்தி, ஜனநாயகத்தையே குறைமதிப்பிற்கு உட்படுத்த ஜனநாயக சுதந்திரங்களைத் தவறாகப் பயன்படுத்துபவர்கள் பொறுப்பேற்க வேண்டும்” எனப் பதிவிட்டுள்ளார்.
July 24, 2025 9:40 PM IST

