Last Updated:
அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்திய பொருட்களுக்கு 50% வரி விதிக்க முடிவு.
இந்தியப் பொருட்கள் மீதான 25 சதவிகித வரி விதிப்பு வரும் 7 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என அமெரிக்கா அறிவித்திருந்த நிலையில், தற்போது கூடுதலாக 25 சதவிகித வரியை இந்தியா மீது விதிப்பதாக அமெரிக்க அதிபர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதியாகும் பொருட்கள் மீது ஆகஸ்ட் 1ஆம் தேதியான வெள்ளிக்கிழமை முதல், 25 விழுக்காடு வரி விதிக்கப்படும் என டிரம்ப் அறிவித்திருந்தார். மேலும் ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்வதால் கூடுதல் அபராதம் விதிக்கப்படும் என்றும் டிரம்ப் எச்சரித்திருந்தார்.
இதுகுறித்து தனது சமூகவலைதளத்தில் பதிவிட்ட அதிபர் டிரம்ப், இந்தியா, அமெரிக்காவுக்கு நல்ல நண்பராக இருந்து வந்தாலும், வேறு எந்த நாடும் வசூலிக்காத அளவுக்கு அமெரிக்கப் பொருள்களுக்கு அதிக வரி வசூலிப்பதாகக் குற்றம்சாட்டினார். வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு மிகக் கடுமையான பணமற்ற வர்த்தகத் தடைகளை இந்தியா கொண்டிருப்பதாகவும் சாடினார்.
ராணுவத் தளவாடங்களை ரஷ்யாவிடம் இருந்து அதிகளவில் வாங்கி வருவதாகவும், உக்ரைனில் போரை நிறுத்த முயலும் உலக அணுகுமுறைக்கு எதிராக ரஷ்யாவிடமிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெயையும் இந்தியா பெறுவதாகவும் டிரம்ப் குறிப்பிட்டார். இதன் காரணமாக ஆகஸ்ட் ஒன்று முதல் இந்தியப் பொருட்களுக்கு 25 விழுக்காடு இறக்குமதி வரி மற்றும் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்காக அபராதம் விதிக்கப்படும் என்று டிரம்ப் அறிவித்திருந்தார்.
வரி விதிப்பு உயர்வு ஆகஸ்ட் 7 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று (5ஆம் தேதி) நியூஸ்18 குழுமத்தின், சி.என்.பி.சி. டிவி18 (cnbc tv18)க்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பிரத்யேக பேட்டி அளித்தார். அதில் அவர், “அடுத்த 24 மணி நேரத்தில் இந்தியாவிற்கான வரியை கணிசமாக உயர்த்தப் போகிறேன் என்று நினைக்கிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.
அதன்படி தற்போது, ஏற்கனவே விதிக்கப்பட்ட 25 சதவிகித வரியுடன் கூடுதலாக 25 சதவிகித வரியை இந்தியா மீது விதிப்பதாக அமெரிக்க அதிபர் தெரிவித்துள்ளார். இதன் மூலம், அமெரிக்கா, இந்தியா மீது தற்போது 50 சதவிகித வரியை விதித்துள்ளது.
August 06, 2025 7:50 PM IST
இந்தியாவுக்கு 25 இல்லை… 50 சதவிகித வரி விதிக்கிறேன்… – திடீரென முடிவை மாற்றிய அமெரிக்க அதிபர் டிரம்ப்


