இந்தியா, சீனாவிற்கு இடையே எல்லைப் பிரச்னையைத் தாண்டி… ஆசிய நாடுகளிலேயே யார் டாப் இடத்தைப் பிடிப்பது என்கிற போட்டி பல தசாப்தங்களைக் கடந்தும் தொடர்ந்துகொண்டிருக்கிறன.
இதன் விளைவு தான் அடிக்கடி இந்தியா, சீனா இடையே நடக்கும் “பங்காளி சண்டைகள்’.
2020-ம் ஆண்டு எல்லைப் பிரச்னைக்கு பிறகு இந்தியா, சீனா உறவில் பெரும் விரிசல் உண்டாகியது. இரு நாடுகளும் நேரடி விமானங்களை ரத்து செய்யும் அளவிற்கு அந்த விரிசல் இருந்தது.
ஆனால், கடந்த சில மாதங்களாக, இந்த விரிசலின் அளவு குறைந்து, உறவு கூட ஆரம்பித்திருக்கிறது. இந்த ஆரம்பம் ‘பிரிக்ஸ்’ அமைப்பிற்குப் பிரச்னை வந்தப் போது தொடங்கியது.
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய உலகில் உள்ள தென்னாடுகளின் கூட்டமைப்பு ‘பிரிக்ஸ்’.
அமெரிக்க அதிபராக பதவியேற்ற ட்ரம்ப் டார்கெட் செய்தவற்றில் ‘பிரிக்ஸ்’ முக்கியமான ஒன்று. பிரிக்ஸ் நாடுகள் அமெரிக்க டாலருக்கு எதிராக ஒரு நாணயத்தை உருவாக்க உள்ளது என்று குற்றம் சாட்டினார் ட்ரம்ப்.
இதனால், பிரிக்ஸ் நாடுகளின் மீது வரி விதிக்க உள்ளதாகவும் அச்சுறுத்தினார்.
இந்த நிலையில், பிரிக்ஸ் நாடுகள் தங்களது ஒற்றுமையைக் காட்டும் நிலைக்குத் தள்ளப்பட்டன.
இதையடுத்து, 2020-ம் ஆண்டு பிரச்னைக்குப் பிறகு, முதல்முறையாக, கடந்த ஆகஸ்ட் மாதம் சீனா சென்றார் இந்திய பிரதமர் மோடி.
அதன் பிறகு, இரு நாடுகளின் உறவும் நேரடி விமானப் போக்குவரத்தைத் தொடங்கியதில் இருந்து மெல்ல மெல்ல சுமுக நிலைக்குத் திரும்பி வருகின்றன.

