இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை எப்போது குறையும்? – அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி பதில்
ஈரான் போர் காரணமாக இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் வரத்து நின்று போனது. உலக சந்தையிலும் கச்சா எண்ணெய் விலை பல மடங்கு உயர்ந்தது. ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 110 டாலர் என்ற வரலாற்று உச்சத்தை எட்டியது. இதனை அடுத்து இந்திய நிறுவனங்கள் கடந்த மே 15ஆம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலைகளை உயர்த்த தொடங்கின.
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 107.87 ரூபாய்க்கும் ஒரு லிட்டர் டீசல் 99.65 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. ஒருகிலோ சிஎன்ஜி 97 ரூபாய்க்கு கிடைக்கிறது. ஈரான் போர் காரணமாக சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் லிட்டருக்கு 8 ரூபாய் விலை உயர்ந்துள்ளன. அதுவும் குறுகிய 15 நாட்களுக்குள்ளேயே இந்த விலை ஏற்பட்டது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் உயர்ந்துவிட்டன.

இந்நிலையில் ஈரான் போர் முடிவுக்கு வந்து ஹார்முஸ் ஜலசந்தி வழியே கப்பல் போக்குவரத்து தொடங்கியுள்ளது. உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 77 டாலர் என வரலாற்று உச்ச விலையில் இருந்து 30% சரிந்துவிட்டது. எனவே இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை எப்போது குறையும் என்பது தான் கோடிக்கணக்கான சாமானிய மக்களின் கேள்வி.
மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, உத்திரப் பிரதேசத்தின் சோன்பத்ரா மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது பெட்ரோல், டீசல் விலைகள் எப்போது குறையும் என்பதற்கான தகவல்களை பகிர்ந்துள்ளார். தற்போது இந்திய எண்ணெய் நிறுவனங்களிடம் அதிக விலைக்கு வாங்கப்பட்ட கச்சா எண்ணெய் இருப்பு உள்ளது. எனவே, இப்போது அதைத்தான் அவர்கள் சுத்திகரிப்பு செய்து வருகிறார்கள் என கூறியுள்ளார்.
கடந்த சில நாட்களாக தான் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது. இந்த குறைந்த விலையிலான கச்சா எண்ணெய் இந்திய சுத்திகரிப்பு நிலையங்களுக்கு வந்து சேர்ந்தவுடன், நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையைக் குறைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன என தெரிவித்துள்ளார். இதன்படி இந்தியாவில் உடனடியாக பெட்ரோல், டீசல் விலைகள் குறைய போவதில்லை என்பது உறுதியாகியுள்ளது. அதே வேளையில் மேற்கொண்டு விலை உயர்வதற்கான வாய்ப்புகளும் குறைந்துவிட்டன என்பது ஒரு நிம்மதி. புது ஸ்டாக் வரும் போது பெட்ரோல், டீசல் விலைகள் குறையும்.
உலகளவில் கச்சா எண்ணெய் சந்தையில் கடுமையான ஏற்ற இறக்கங்கள் இருந்தபோதிலும், இந்தியாவில் எரிபொருள் விலைகள் ஓரளவுக்குக் கட்டுப்பாட்டிலேயே வைக்கப்பட்டுள்ளன என கூறியுள்ள அமைச்சர், ஐக்கிய நாடுகள் சபையில் உள்ள 193 நாடுகளில், ஜப்பானைத் தவிர இந்தியாவில்தான் பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வு மிகக் குறைவாக உள்ளது என கூறியுள்ளார்.
உலகளவில் சப்ளை பாதிப்பு ஏற்பட்டாலும், இந்தியாவிற்கு அடுத்த 76 முதல் 80 நாட்களுக்குத் தேவையான எண்ணெய் மற்றும் எரிவாயு இருப்பு கைவசம் உள்ளது என தெரிவித்துள்ள அவர் மத்திய கிழக்கு நாடுகளில் சிக்கல் நீடித்தால், அமெரிக்கா, கனடா போன்ற பிற நாடுகளிலிருந்து கச்சா எண்ணெயை பெற்று தேவையை பூர்த்தி செய்ய இந்தியா தயாராக உள்ளது என கூறினார்.

