ஆகஸ்ட் மாத புள்ளி விவரங்கள், நகர்ப்புறங்கள் இன்னும் முன்னிலையில் இருப்பதைக் காட்டுகின்றன. மொத்த வயர்லெஸ் சந்தாதாரர்களில் 54.78 சதவீதம் நகர்ப்புறங்களிலும், 45.22 சதவீதம் கிராமப்புறங்களிலும் உள்ளனர்.
நகர்ப்புற வயர்லெஸ் சந்தாதாரர்கள் ஜூலை மாதத்தில் 641.03 மில்லியனாக இருந்த நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் 645.27 மில்லியனாக உயர்ந்தனர். அதாவது, 0.66% வளர்ச்சி பதிவாகி இருக்கிறது. அதே நேரத்தில், கிராமப்புறங்களில் 530.88 மில்லியனில் இருந்து 532.76 மில்லியனாக உயர்வு பதிவாகியுள்ளது, இது 0.36% வளர்ச்சியைக் காட்டுகிறது. இது, இந்தியாவின் டிஜிட்டல் இணைப்பு நகர்ப்புறங்கள் மட்டுமன்றி, கிராமப்புறங்களிலும் மெதுவாக வேரூன்றி வருவதைக் காட்டுகிறது.
ஆகஸ்ட் மாதம் மட்டும் 15.05 மில்லியன் மொபைல் பயனர்கள் தங்களது மொபைல் எண்ணை மாற்றாமல் சேவை வழங்குநரை மாற்றும் கோரிக்கையை (MNP) சமர்ப்பித்துள்ளனர். இது, நுகர்வோர் சேவை தரம் மற்றும் இணைப்பு நம்பகத் தன்மைக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதைக் குறிக்கிறது.
இந்தியாவின் மொத்த வயர்லெஸ் மொபைல் இணைப்பு விகிதத்தை காட்டும் முக்கிய அளவுகோல், ஜூலை மாதத்தில் 82.75%இலிருந்து ஆகஸ்ட் மாதத்தில் 83.12%ஆக உயர்ந்தது.
இதுவே நகர்ப்புறத்தில், 126.38%ஆகவும், கிராமப்புறத்தில் 58.76%ஆகவும் உயர்வை பதிவு செய்துள்ளன. இது, நகர்ப்புறங்களில் ஒரு நபருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட மொபைல் இணைப்புகள் இருப்பதைக் காட்டுகிறது.
பிராட்பேண்ட் துறை மிதமான ஆனால், நிலையான வளர்ச்சியைப் பெற்றுள்ளது. ஜூலை மாதத்தில் 984.69 மில்லியன் என இருந்த பிராட்பேண்ட் சந்தாக்கள், 0.50% மாதாந்திர வளர்ச்சி விகிதத்துடன் ஆகஸ்ட் மாதத்தில் 989.58 மில்லியனாக உயர்ந்தன.
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (TRAI) தரவுகளின்படி, தற்போது நாடு முழுவதும் 1,426 சேவை வழங்குநர்கள் பிராட்பேண்ட் சேவைகளை வழங்கி வருகின்றனர்.
இந்த வளர்ச்சி, இந்தியாவின் டிஜிட்டல் இந்தியா நோக்கத்தின் கீழ், இணைய அணுகல் மற்றும் இன்டர்நெட் விரிவாக்கம் வெற்றிகரமாக முன்னேறி வருவதை உறுதிப்படுத்துகிறது.
மறுபுறம், வயர் மூலமான சந்தாதாரர்கள் குறைந்து வருகின்றனர். ஜூலை மாதத்தில் 48.11 மில்லியனாக இருந்த வயர்லைன் சந்தாக்கள், ஆகஸ்ட் மாதத்தில் 1.61 மில்லியன் நிகர இழப்பு மற்றும் 3.34% மாதாந்திர சரிவுடன் 46.51 மில்லியனாக குறைந்தன. இதன் விளைவாக, இந்தியாவின் மொத்த வயர்லைன் தொலைத்தொடர்பு இணைப்பு ஜூலை மாதத்தின் 3.40%லிருந்து 3.28%ஆகக் குறைந்துள்ளது.
நகர்ப்புற வயர்லைன் மொபைல் இணைப்பு விகிதம் 8.13%ஆகவும், கிராமப்புறம் 0.55% என்ற குறைந்த நிலையையும் தக்கவைத்துள்ளது. மொத்த வயர்லைன் தளத்தில், நகர்ப்புற சந்தாதாரர்கள் 89.28% மற்றும் கிராமப்புற சந்தாதாரர்கள் 10.72% பங்கைக் கொண்டுள்ளனர்.
பிஎஸ்என்எல், எம்டிஎன்எல், ஏபிஎஸ்எஃப்எல் போன்ற பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வயர்லைன் துறையில் 20.53% பங்குகளைப் பெற்றுள்ளன. தனியார் நிறுவனங்கள் அதற்கு மேலான பங்குகளுடன் இருந்தாலும், அரசின் கீழுள்ள நிறுவனங்கள் தங்களது நிலையை உறுதியாக தக்கவைத்துள்ளன.
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) வெளியிட்ட இந்த புள்ளி விவரங்கள், இந்தியாவின் தொலைத்தொடர்பு துறை நம்பகமான வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருப்பதை காட்டுகின்றன. நகர்ப்புறங்களில் மொபைல் இணைப்பு விகிதம் ஏற்கனவே முழு அளவில் பரவியுள்ள நிலையில், கிராமப்புறங்களிலும் இணைய அணுகல் வேகமாக விரிவடைவதை காண முடிகிறது.
பிராட்பேண்ட் மற்றும் மொபைல் இணைப்புகளில் தொடர்ந்து பதிவாகும் உயர்வு, இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் 5G பரவலுக்கான வலுவான அடித்தளத்தைக் குறிக்கிறது.
October 08, 2025 2:06 PM IST
இந்தியாவில் ஒரு பில்லியனைத் தாண்டிய மொபைல் சந்தாதாரர்கள்…! டிராய் வெளியிட்ட அறிக்கை இதுதான்…

