Last Updated:
மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், இந்தியாவில் எரிவாயு தட்டுப்பாடு இல்லை, அமெரிக்கா உடனான வர்த்தக பேச்சுவார்த்தை தொடரும் என தெரிவித்தார்.
போரினால் பாதிப்புகள் வருவது இயல்பானதே, ஆனால் இந்தியாவில் கச்சா எண்ணெய், எரிவாயு மற்றும் விமான எரிபொருள் விநியோகத்தில் எந்தப் பிரச்சனையும் ஏற்படவில்லை என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
இந்திய பிசினஸ் லீடர் விருதுகள்’ (IBLA) விழாவில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியின் போது பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், நடந்து வரும் போர் காரணமாக சில பிரச்னைகள் ஏற்பட்டிருந்தாலும், இந்தியாவின் எரிபொருள் விநியோகம் நிலையாகவே உள்ளது. அதே நேரத்தில், அமெரிக்காவுடன் வர்த்தக பேச்சுவார்த்தைகளை தொடரும் அரசின் உறுதிபாட்டை அவர் வெளிப்படுத்தினார். இந்தியாவில் 12 மாதங்களுக்கு தேவையான எரிப்பொருள் இருப்பதால் யாரும் அச்சமடைய வேண்டாம். அதே சமயம் இந்திய ரூபாயின மதிப்பும் மெல்ல உயரும் என்றும் தெரிவித்தார்.
எல்பிஜி சிலிண்டர்கள் கிடைப்பதில் உள்ள குறைபாடுகளை சமாளிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மண்எண்ணெய் விநியோகத்தை மத்திய அரசு அதிகரித்துள்ளது. மக்கள் எரிவாயு சிலிண்டர்களை சேமித்து வைக்க வேண்டாம். இந்தியா தற்போது மத்திய கிழக்கு நாடுகள் மட்டுமில்லாமல் மற்ற நாடுகளிடம் இருந்தும் எரிசக்தி இறக்குமதியை விரிவுபடுத்தி வருகிறது. கனடா, அமெரிக்கா மற்றும் ரஷ்யா போன்ற தொலைதூர நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய் வாங்கப்படுவதால் கப்பல் போக்குவரத்து நேரம் அதிகரித்தாலும், விநியோக பாதுகாப்பு மேம்படுகிறது.
சரக்குகளை திரும்ப பெற வேண்டிய நிலை அல்லது வேறு வழியாக மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டால், ஏற்றுமதியாளர்களுக்கு உதவும் வகையில் தரநிலை செயல்முறை (SOP) உருவாக்கப்படுகின்றது என்றும் அவர் கூறினார். சரக்கு போக்குவரத்து தாமதமானால் ஏற்றுமதியாளர்களுக்கு காப்பீட்டு ஆதரவு வழங்குவது பற்றியும் அரசு பரிசீலித்து வருகிறது. அடுத்த வாரத்துக்குள் ஏற்றுமதியாளர்களுக்கு ஆதரவாக ஒரு தெளிவான திட்டத்தை அரசு அறிவிக்கும் என்றும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் பியூஷ் கோயல் அமெரிக்காவுடன் உள்ள இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை (BTA) நாங்கள் தொடர்ந்து ஆதரிக்கிறோம். பேச்சுவார்த்தைகள் இடையறாது நடைபெற்று வருகின்றன. கடந்த மூன்றரை ஆண்டுகளில் இந்தியா கையெழுத்திட்ட ஒன்பது சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் 38 பொருளாதாரங்களை உள்ளடக்கியதாகவும், இதன் மூலம் உலக வர்த்தகத்தில் இந்தியாவுக்கு பெரிய அளவில் முன்னுரிமை கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தற்போது இஸ்ரேல் மற்றும் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (GCC) நாடுகளுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. சிலி மற்றும் பெரு நாடுகளுடனும் கலந்துரையாடல்கள் நடைபெறுகின்றன. மேலும் இந்த ஆண்டின் பிற்பகுதியில் மெக்சிகோவுடன் தொடர்பு தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், இந்தியா முன்பு செய்த சில வர்த்தக ஒப்பந்தங்கள் பாதகமாக இருந்ததாகவும் அவர் கூறினார்.
ஜப்பான், கொரியா மற்றும் ஆசிய நாடுகளுடன் செய்த சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தின என்று அவர் தெரிவித்தார். இதனால் தென் கொரியாவுடன் உள்ள ஒப்பந்தத்தை சமநிலை பெறும் வகையில் மறுபரிசீலனை செய்யும் பணியை அரசு தொடங்கியுள்ளதாகவும் கூறினார். மேலும், சில முக்கிய துறைகளை பாதுகாத்தபடியே இந்தியா பல வர்த்தக ஒப்பந்தங்களை பெற்றுள்ளதாகவும் அவர் வலியுறுத்தினார்.
ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகளுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களை செய்து கொண்டாலும், நமது நாட்டின் உற்பத்தி துறையை திறக்காமல் பாதுகாத்த ஒரே நாடு இந்தியாதான் என்றும் தெரிவித்தார்.
Chennai,Tamil Nadu
”இந்தியாவில் எரிவாயு தட்டுப்பாடு இல்லை, அமெரிக்கா உடனான வர்த்தக பேச்சுவார்த்தை தொடரும்” மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்

