Last Updated:
பாக். ராணுவ மேஜர் ஜெனரல் அஹமது ஷெரிப், “இந்தியாவிற்கு பேரழிவு தரும் பதிலடி நடத்துவோம்” என தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் கடந்த வாரம் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவிய நிலையில், ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்திய பாதுகாப்புப் படைகள் பதிலடி கொடுத்து வருகின்றன. இந்திய ராணுவம், விமானப் படை, கடற்படை ஆகியவை இணைந்து கூட்டாக நள்ளிரவில் இந்தத் தாக்குதலை நடத்தினர். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள முர்தி, கோட்லி, முஷாபர்பாத், பாபல்பூர் உள்ளிட்ட இடங்களை குறிவைத்து இந்த துல்லிய தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஸ்-இ-முகம்மது உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளின் தலைமையகங்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏவுகணை கொண்டு நடத்தப்பட்ட இந்த அதிரடி தாக்குதலில் 26 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், 50க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் படுகாயம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 9 இலக்குகளும் வெற்றிகரமாக தாக்கி அழிக்கப்பட்டதாக ராணுவ உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இந்தியாவின் இந்த பதிலடி தாக்குதலை ‘போர் நடவடிக்கை’ எனக் குறிப்பிட்டுள்ள பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப், இந்தியாவின் ஏவுகணை தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதல் குறித்து செய்தியாளர்களிடம் விளக்கமளித்த பாதுகாப்பு படையினர் மற்றும் வெளியுறவுத்துறை செயலாளர், எந்தவித எதிர் தாக்குதலையும் சமாளிக்க தயாராக இருப்பதாக தெரிவித்தனர். மேலும் இந்தியாவில் அமைதியை சீர்குலைக்கவே பஹல்காம் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறிய வெளியுறவு செயலாளர், தீவிரவாதிகளின் உட்கட்டமைப்பை தகர்க்கவே ”ஆபரேஷன் சிந்தூர்” மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவித்தார்.
இந்த செய்தியாளர் சந்திப்பில் கர்னல் சோபியா குரேஷி மற்றும் விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகிய இரண்டு பெண் அதிகாரிகள் கலந்துகொண்டு விளக்கம் கொடுத்தனர். இந்நிலையில் இன்று மாலை டெல்லியில் ஆபரேஷன் சிந்தூர் குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் கொடுத்தார். அதில் அவர், “திட்டமிட்டபடி தீவிரவாதிகளின் நிலைகளை துல்லியமாக தாக்கி அழித்துள்ளோம். பாதுகாப்புப்படைகளின் நடவடிக்கையால் நாடே பெருமையடைகிறது. முப்படைகளால் இந்தியாவிற்கு பெருமை. பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின் கீழ் நமது இந்திய ஆயுதப் படைகள் நம் அனைவரையும் பெருமைப்படுத்தி உள்ளன. நமது படைகள் வரலாறு படைத்துள்ளன. பஹல்காமில் அப்பாவி மக்களை கொன்றவர்களை பழி தீர்த்துவிட்டோம். ஆபரேஷன் சிந்தூரில் பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை. ஆபரேஷன் சிந்தூரின் நோக்கம் தீவிரவாதிகள் மட்டுமே” எனத் தெரிவித்தார்.
இதேசமயத்தில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பாகிஸ்தான் பாதுகாப்புக் குழுவினருடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். மேலும், இந்தியா தாக்குதல் நடத்திய இடங்கள் கற்பனையான தீவிரவாத முகாம்கள் எனவும் பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், பாகிஸ்தான் ராணுவ மேஜர் ஜெனரல் அஹமது ஷெரிப் “எங்கள் நடவடிக்கைகள் அனைத்தும் முற்றிலும் தற்காப்பிற்காகவே இருந்தன; இந்தியாவிற்கு எதிராக பேரழிவு தரும் பதிலடி தாக்குதலை நடத்துவோம்” எனத் தெரிவித்துள்ளார்.
May 07, 2025 10:19 PM IST
“இந்தியாவிற்கு எதிராக பேரழிவு தரும் பதிலடி நடத்துவோம்” – பாக். ராணுவ மேஜர் ஜெனரல் அஹமது ஷெரிப்


