Last Updated:
செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “இந்தியாவின் நம்பிக்கையான நட்பு நாடு பிரான்ஸ்” எனத் தெரிவித்தார்.
இந்தியா – பிரான்ஸ் உறவில் புதிய மைல்கல்லாக மும்பையில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் சந்தித்து பேசினர்.
அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ள பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை, மும்பையில் உள்ள மகாராஷ்டிர லோக் பவனில் பிரதமர் மோடி நேரில் சந்தித்தார். இரு தலைவர்களும் ஒருவரையொருவர் கட்டியணைத்துத் தங்களது நட்பைப் பரிமாறிக்கொண்டனர்.
அதை தொடர்ந்து இருநாட்டு தலைவர்களும் உயர்மட்ட ஆலோசனையில் ஈடுபட்டனர். அப்போது, பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பு, வர்த்தகம், விண்வெளி ஆராய்ச்சி உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.
முன்னதாக, மும்பை சர்ச்கேட்டில் அதிபர் மேக்ரான் தனது பாதுகாப்புப் படையினருடன் ஜாக்கிங் சென்றார். இது குறித்துப் பதிவிட்ட பிரதமர் மோடி, தனது நண்பர் மேக்ரானுக்கு மும்பை நகரம் மிகவும் பிடித்துப்போய்விட்டதாக தெரிவித்துள்ளார்.
மும்பை பயணத்தின் ஒரு பகுதியாக, 2008 மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் நினைவிடத்தில் மேக்ரான், அவரது மனைவி பிரிகிட்டே மரியாதை செலுத்தினர். மேலும், பாலிவுட் பிரபலங்களான அனில் கபூர், ஷபானா ஆஸ்மி, மனோஜ் பாஜ்பாய், இசையமைப்பாளர் ரிக்கி கேஜ் ஆகியோரை மேக்ரான் சந்தித்து உரையாடினார்.
இதேபோல், செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “இந்தியாவின் நம்பிக்கையான நட்பு நாடு பிரான்ஸ்” எனத் தெரிவித்தார்.


