இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தமிழ்நாட்டைச் சார்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் குடியரசு துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவார் என்று ஜெ.பி.நட்டா அறிவித்துள்ளார். தமிழ்நாட்டைச் சார்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் தற்போது மகாராஷ்டிரா மாநில ஆளுநராக உள்ளார்.
குடியரசுத் துணைத் தலைவராக வருவதற்கான தகுதிகள்: இந்தியக் குடிமகனாக இருக்கக்கூடிய, 35 வயது பூர்த்தி அடைந்த ஒருவர் இந்தப் பதவிக்கு தகுதியானவர். மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்படுவதற்கான தகுதிகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
குடியரசுத் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படும் நபர் வேறு எந்த பொறுப்பும் வகிக்கக்கூடாது. எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.வாக இருக்கும் ஒருவர் இந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால், அந்த நொடி முதல், அவரின் முந்தைய பதவியை ராஜினாமா செய்ததாக கருதப்படும்.
யாரெல்லாம் வாக்களிக்கலாம்: குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில், மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பி.க்கள் வாக்களிக்கலாம். இதில், நியமன எம்.பி.க்களும் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் வாக்களிக்கலாம். ஆனால், நியமன எம்.பி.க்களால் குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்க முடியாது.
துணைக்குடியரசுத் தலைவருக்கு இருக்கும் பொறுப்புகள்: துணைக் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படும் நபர், மாநிலங்களவைத் தலைவராகவும் செயல்படுவார். குடியரசுத் துணைத் தலைவரின் பதவி காலம் ஐந்து ஆண்டுகள். ஆனால், அவரது பதவி காலம் முடிந்தும், அடுத்தவரை தேர்ந்தெடுக்கும் வரை அவர் அந்தப் பதவியில் தொடரலாம்.
மாநிலங்களவையை ஒத்திவைக்கவோ அல்லது அதன் அமர்வை நிறுத்தி வைக்கவோ துணைக் குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் உண்டு.
இந்தியாவின் முதன் குடிமகனான, குடியரசுத் தலைவரின் பதவி காலியாகும் பட்சத்தில், புது குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை துணைக் குடியரசுத் தலைவர் அந்தப் பதவியை வகிப்பார். மேலும், உடல் நலக் குறைவு உள்ளிட்ட காரணங்களால், குடியரசுத் தலைவரால் செயல்பட முடியவில்லை என்றால், துணைக் குடியரசுத் தலைவர், குடியரசுத் தலைவராக செயல்படுவார்.
அரசமைப்பு சட்டத்தின்படி குடியரசுத் தலைவர் பதவிக்கு கீழேயும், பிரதமர் பதவிக்கு மேலேயும் இருக்கும் குடியரசுத் துணைத் தலைவர் பிறநாடுகளுடன் ராஜீய உறவுகளை வலுப்படுத்த வெளிநாட்டு பயணங்களையும் மேற்கொள்ளலாம்.
மாநிலங்களவை தலைவராகவும் இருக்கும், குடியரசுத் துணைத் தலைவருக்கு எதிராக மாநிலங்களவை உறுப்பினர்கள் தீர்மானம் நிறைவேற்றி, அது வெற்றி பெற்றால், அவர் அந்தப் பதவியில் இருந்து நீக்கப்படுவார்.
August 18, 2025 3:43 PM IST

