Last Updated:
பொங்கல் பண்டிகைக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் மண்பாண்டத் தயாரிப்பு வேகமெடுத்து வருகிறது.
தமிழகர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று பொங்கல். உழவுத் தொழிலுக்கு ஆதாரமாக விளங்கும் சூரியனுக்கும் கால் நடைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் நாள். பன்னெடுங்கலாக கொண்டாடப்படும் இந்தப் பண்டிகையில் முக்கிய மரபாக, புதுப்பானையில் பொங்கலிடும் வழக்கம் இன்றளவும் கடைபிடிக்கப்படுகிறது. 2026 ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், மண்பானைகளின் தயாரிப்பு பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் அருகேயுள்ள சாலைஅகரம், ராகவன்பேட்டை, அய்யூர்அகரம், அய்யங்கோவில்பட்டு உள்ளிட்ட பகுதிகளில், பல ஆண்டுகளாக மண்பாண்டத் தொழிலில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள், மண்பானைகள் தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சாலைஅகரம் பகுதியில் தயாரிக்கப்படும் மண்பானைகள், விழுப்புரம் மாவட்டம் மட்டுமின்றி சென்னை, கோவை, சேலம், திருச்சி, ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், புதுச்சேரி மாநிலத்திற்கும், சில வெளிநாடுகளுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு ஏற்பட்ட ‘பெஞ்சல்’ புயல் காரணமாக பெய்த தொடர் கனமழையால், மண்பானைகள் தயாரிப்பு தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டது. உற்பத்தி இழப்பை ஈடு செய்யும் நோக்கில், இந்தாண்டு மண்பானை விற்பனையை அதிகரிக்க தொழிலாளர்கள் இரவு பகலாக மும்முரமாக பணியாற்றி வருகின்றனர். சிறிய அளவிலான பானைகள் முதல் பெரிய அளவிலான பானைகள் வரை தயாரிக்கப்பட்டு வருகின்றன. அளவு, வடிவமைப்பின் அடிப்படையில் பானையின் விலை ரூ.50 முதல் ரூ.500 வரை நிர்ணயம் செய்யப்படுகிறது.
இதுகுறித்து சாலைஅகரத்தைச் சேர்ந்த மண்பாண்டத் தொழிலாளர் சிவஞானம் கூறுகையில், தமிழர்களின் பாரம்பரியத்தைப் பின்பற்றி தலைமுறை தலைமுறையாக மண்பாண்டத் தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற நம்பிக்கையு உள்ளது. வருடத்தில் கார்த்திகை தீபம் மற்றும் பொங்கல் பண்டிகை காலங்களே தங்களின் முக்கிய வாழ்வாதாரமாக இருப்பதாகவும், மண்பானை சமையல் தற்போது அரிதாகி வருவதால் மண்பாண்டத் தொழிலின் மவுசு குறைந்து வருவதாகவும் வேதனை தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “அரசு ஆண்டுதோறும் ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் அத்தியாவசியப் பொருட்கள், ரொக்கப்பணம் மற்றும் கரும்பு வழங்கி வருகிறது. அதேபோல், பொங்கல் வைப்பதற்கு அவசியமான மண்பானைகளையும் பரிசுத் தொகுப்பில் சேர்த்து வழங்கினால், மண்பாண்டத் தொழிலாளர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும். கடந்த சில ஆண்டுகளாக இந்த கோரிக்கையை வலியுறுத்தி வருவதாகவும், இந்த ஆண்டாவது அரசு இதனை அறிவிக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தாண்டு முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பில் கூடுதலாக மண் பானை… தமிழக அரசுக்கு தொழிலாளர்கள் கோரிக்கை

