இணையவழி பந்தயம் மற்றும் சூதாட்டத்தை கட்டுப்படுத்த மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து பதிலளிக்குமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
இணையவழி பந்தயம் மற்றும் சூதாட்ட செயலிகள் அசூர வளா்ச்சியடைந்து மிகப்பெரும் பொதுப் பிரச்னையாக உருவெடுத்துள்ளதாகவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
சட்டவிரோதமான இணையவழி சூதாட்டம் மற்றும் பந்தய தளங்கள், மக்களின் கடின உழைப்புப் பணத்தை மோசடி செய்து, பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக அமலாக்கத் துறை பல்வேறு வழக்குகளில் விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக நடிகா்கள் பிரகாஷ் ராஜ், ராணா டகுபதி, விஜய் தேவரகொண்டா, நடிகை மஞ்சு லக்ஷ்மி ஆகியோருக்கு அமலாக்கத் துறை முதல்கட்டமாக சம்மன் அனுப்பியது. ஹைதராபாதில் உள்ள அமலாக்கத் துறையின் மண்டல அலுவலகத்தில் நடிகா் பிரகாஷ் ராஜ் ஜூலை 30-இல் ஆஜரானாா்.
இதைத்தொடா்ந்து, ராணா டகுபதி ஆகஸ்ட் 11-ஆம் தேதியும், விஜய் தேவரகொண்டா ஆகஸ்ட் 6-ஆம் தேதியும், மஞ்சு லக்ஷ்மி ஆகஸ்ட் 13-ஆம் தேதியும் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனா்.
இந்நிலையில், ஹைதராபாத்தைச் சோ்ந்த தொழிலதிபரான கே.ஏ.பால் என்பவா் உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்தாா்.