Last Updated:
இரண்டாவது நாளாக டிரோன் தாக்குதல். ஜம்மு & காஷ்மீர் முதலமைச்சர் இருக்கும் இடத்திலிருந்து இடைவிடாத குண்டுவெடிப்புச் சத்தங்கள் கேட்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் எல்லைப் பகுதிகளில் நேற்று (8ஆம் தேதி) பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது இந்தியாவும் தாக்குதல் நடத்தியது. இந்நிலையில், இந்தத் தாக்குதல் குறித்து வெளியுறவுத் துறைச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, கர்னல் சோபியா குரேஷி, விங் கமாண்டர் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்து தாக்குதல் குறித்து விளக்கம் அளித்தனர்.
செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்திருப்பதாவது; “மே 8 ஆம் தேதி இரவு பாகிஸ்தான் ராணுவம் இந்திய ராணுவ நிலைகளை குறிவைத்து தாக்கியது. இந்திய ஜம்மு விமான நிலையத்தை தாக்கும் பாகிஸ்தான் முயற்சி முறியடிக்கப்பட்டது. பாகிஸ்தான் ராணுவம் துருக்கியின் ட்ரோன்களை பயன்படுத்தி தாக்க முயற்சித்தது. அதனை நாம் முறியடித்துள்ளோம். வட இந்தியாவில் உள்ள 26 இடங்களை குறிவைத்து பாகிஸ்தான் தாக்கியது. 300 முதல் 400 ட்ரோன்களை பயன்படுத்தி 36 இந்தியப் பகுதிகளில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் முயற்சித்தது. டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டு அந்த முயற்சிகள் தோற்கடிக்கப்பட்டன.
விதிமுறைகளை மீறி எல்லைக்கோடு அருகே பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானை இந்தியாவுக்குள் ஊடுருவவிடாமல் இந்தியா விரட்டி அடித்தது. பொய்களை பரப்பி உலகை தவறாக வழிநடத்த பாகிஸ்தான் முயற்சி செய்தது. ஆனால், தற்போது பாகிஸ்தானின் கீழ்த்தரமான செயல் அம்பலமாகியுள்ளது. தனது அத்துமீறல்களை மறைக்க பாகிஸ்தான் முயற்சிக்கிறது. பத்திந்தா ராணுவ தளத்தை பாகிஸ்தான் தாக்க முயற்சித்தது. ஆனால், இந்தியா அதனை வீழ்த்தி தோல்வி அடையச் செய்தது. இந்தியாவின் வான் பாதுகாப்பு எவ்வாறு உள்ளது என சோதித்த பாகிஸ்தான் தக்க பதிலடியை பெற்றது.
குருத்வாராவை இந்தியா குறிவைத்தது என்பது தவறான தகவல். மதக் கலவரத்தை உருவாக்க பாகிஸ்தான் முயற்சிக்கிறது. வழிபாட்டு தலங்களை பாகிஸ்தான் தாக்க முயற்சித்தது. தாக்குதல் மூலம், பாகிஸ்தானுக்கு பலத்த சேதத்தை இந்தியா ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானுக்கு நிதி உதவி கிடைப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. இது தொடர்பாக சர்வதேச நிதியத்திடம் பேசப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டது.
Intermittent sounds of blasts, probably heavy artillery, can now be heard from where I am.
— Omar Abdullah (@OmarAbdullah) May 9, 2025
இந்நிலையில் இன்று (9ஆம் தேதி) மீண்டும் சாம்பா, பூஞ்ச், உதம்பூர், ஆகிய பகுதிகளில் பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதலை துவக்கி நடத்திவருகிறது. இதனை இந்திய ராணுவம் முறியடித்து வருகிறது. இந்நிலையில், ஜம்மு & காஷ்மீர் முதலமைச்சர் ஒமர் அப்துல்லா தனது எக்ஸ் பக்கத்தில், “நான் இருக்கும் இடத்திலிருந்து இடைவிடாத குண்டுவெடிப்புச் சத்தங்கள், அநேகமாக கனரக பீரங்கிச் சத்தங்கள், இப்போது கேட்கின்றன. ஜம்முவிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் உள்ள அனைவருக்கும் எனது மனமார்ந்த வேண்டுகோள் என்னவென்றால், அடுத்த சில மணிநேரங்களுக்கு தெருக்களில் வருவதைத் தவிர்த்து, வீட்டிலேயே அல்லது நீங்கள் வசதியாக தங்கக்கூடிய அருகிலுள்ள இடத்தில் இருங்கள். வதந்திகளைப் புறக்கணிக்கவும், ஆதாரமற்ற அல்லது சரிபார்க்கப்படாத தகவல்களை பரப்ப வேண்டாம், இதை நாம் ஒன்றாகக் கடந்து செல்வோம்” எனத் தெரிவித்துள்ளார்.
Jammu and Kashmir
“இடைவிடாத குண்டுவெடிப்புச் சத்தங்கள்..” ஜம்மு – காஷ்மீர் மக்களுக்கு கோரிக்கை வைத்த முதலமைச்சர் ஓமர் அப்துல்லா!


