சிறிலங்காவின் (Sri Lanka) இறுதி யுத்தத்தின் போது விடுதலைப் புலிகளின் தலைவர், இசைப்பிரியா, மற்றும் பாலசந்திரன் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டமை குறித்து விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என கோரும் முறைப்பாட்டினை சட்டவிவகாரங்களை கையாளும் பிரதி காவல்துறைமா அதிபரிடம் கையளித்துள்ளதாக சட்டத்தரணி தனுக ரணஞ்சக கஹந்தகமகே தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் ஒரு பதிவை வைத்து அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “நான் பதிவு செய்த முறைப்பாடு தற்போது காவல்துறை தலைமையகத்தில் சட்டவிவகாரங்களை கையாளும் பிரதி காவல்துறைமா அதிபரினால் ஆராயப்பட்டு வருகிறது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி
இந்த விவகாரம் அதிகாரப்பூர்வ சட்ட வழிகள் மூலம் முறையாக விசாரிக்கப்படுவதையும் ஓரங்கட்டப்படாமல் இருப்பதையும் உறுதி செய்வதற்காக நான் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளேன்.
எனது முன்னுரிமை வெளிப்படைத்தன்மை பொறுப்புக்கூறல் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதாகும்.
அதிகாரிகள் உடனடியாகவும் முழுமையாகவும் செயல்பட வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
இந்த வழக்கு முன்னோக்கி நகரும்போது உங்கள் தொடர்ச்சியான ஆதரவு மற்றும் ஈடுபாட்டிற்காக பொதுமக்களுக்கும் நன்றி கூறுகிறேன் ” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு யுத்தத்தின் இறுதி தருணங்களில் சரணடைந்த பலர் கொல்லப்பட்டமை குறித்த போர் குற்றச்சாட்டு குறித்து விசாரணைகள் மேற்கொள்ளுமாறு தனுக ரணஞ்சக கஹந்தகமகே கடந்த 13ஆம் திகதி காவல்துறை மா அதிபருக்கு மனு ஒன்றை சமர்பித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |