மெல்பர்ன்: ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இளம் வீரர் உயிரிழந்ததைத் தொடர்ந்து சர்வதேச 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலிய அணியினர் கருப்புப் பட்டை அணிந்து விளையாடினர்.
இந்தப் போட்டி மெல்பர்ன் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. மெல்பர்ன் நகரைச் சேர்ந்த 17 வயது இளம் வீரரான பென் ஆஸ்டின் என்பவர், பெர்ன்ட்ரீ கல்லி கிரிக்கெட் கிளப்பில் வலைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவரது கழுத்துப் பகுதியில் பந்து அதிவேகமாகத் தாக்கியது. இதில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 2 நாள் தீவிர சிகிச்சை அளித்தும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற 2-வது டி20 போட்டியின் போது பென் ஆஸ்டின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும், அவரது குடும்பத்தினருக்குத் தங்களது இரங்கலைத் தெரிவிக்கும் வகையிலும் ஆஸ்திரேலியா, இந்திய அணிகளைச் சேர்ந்த வீரர்கள் கையில் கருப்புப் பட்டை அணிந்து விளையாடினர்.

