பெர்த்: இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரின் முதல் ஆட்டம் இன்று காலை 9 மணிக்கு பெர்த் நகரில் உள்ள ஆப்டஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்திய அணி புதிய கேப்டனான ஷுப்மன் கில் தலைமையில் களமிறங்குகிறது.
சீனியர் பேட்ஸ்மேன்கள் மற்றும் முன்னாள் கேப்டனான ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் 7 மாதங்களுக்கு பிறகு மீண்டும் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் களமிறங்க உள்ளனர். டி20, டெஸ்ட் போட்டிகளில் இருந்து இவர்கள் ஓய்வு பெற்றுவிட்டதால் இனிமேல் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாட உள்ளனர்.
இதனால் ரோஹித் சர்மா, விராட் கோலியின் ஆட்டத்தை காண்பதில் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஆஸ்திரேலிய தொடருக்காக இவர்கள் இருவரும் தீவிர பயிற்சிகளை எடுத்துள்ளனர். ரோஹித் சர்மா தனது உடல் எடையை கணிசமாக குறைத்துள்ளார். மும்பையில் அவர், அபிஷேக் நாயர் உதவியுடன் சில அமர்வுகள் பயிற்சி எடுத்துள்ளார். விராட் கோலி லண்டனில் தனியார் பயிற்சியாளர் உதவியுடன் நீண்ட நேரம் பயிற்சிக்கு செலவிட்டிருந்தார்.
எனினும் இந்த இரண்டு ஜாம்பவான்களுக்கும் உள்ள ஒரே சவால் என்னவென்றால், ஒரே ஒரு வடிவிலான போட்டியில் மட்டும் விளையாட முடிவு செய்துவிட்டு ஐபிஎல் தொடருக்கு பின்னர் நீண்ட நாட்களுக்கு பிறகு சர்வதேச போட்டியில் களமிறங்குவதுதான். எனினும் இவர்கள் தங்களது கிரிக்கெட் பயணத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக உயர்மட்ட செயல்திறனை வெளிப்படுத்தி உள்ளனர்.
சீனியர் நட்சத்திரங்களான இவர்கள் 2027-ம் ஆண்டு நடைபெற உள்ள 50 ஓவர் உலகக் கோப்பை வரை விளையாட முடிவு செய்துள்ளனர். இதற்கு இந்த ஆஸ்திரேலிய தொடர் தொடக்க புள்ளியாக அமையக்கூடும். இங்கிருந்து அவர்கள், தங்களது இறுதிக்கட்ட கிரிக்கெட் பயணத்தை கட்டமைக்க உள்ளனர். கேப்டன் பொறுப்பில் இருந்து விடுக்கப்பட்டுள்ள ரோஹித் சர்மா சீனியர் வீரர் என்ற புதிய பாத்திரத்துடன் செயல்பட உள்ளார்.
ரோஹித் சர்மா கடைசியாக டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்கு ஐசிசி கோப்பைகளை கேப்டனாக வென்று கொடுத்திருந்தார். மெல்பர்னில் தனது கடைசி டெஸ்ட் போட்டியிலும் அவர் அணியை வழிநடத்தியிருந்தார். விராட் கோலி மீண்டும் ரன்வேட்டை நிகழ்த்த முடிந்தால், ரோஹித் சர்மா தனது அபாரமான ஷாட்களால் எதிரணிக்கு தொடக்கத்திலேயே அச்சுறுத்தலை அளிக்க முடிந்தால், இவர்கள் இருவரும் உலகக் கோப்பை தொடர் வரை நிலைத்திருக்கலாம்.
ஏனெனில் தற்போதைய தேர்வாளர்களும் அணி நிர்வாகமும் எதிர்காலத்தை மனதில் கொண்டு, குறிப்பாக 2027-ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு சில முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். மேலும் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர்களான ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் தற்போது தலைமை பொறுப்பில் இல்லை என்பதையும், தங்களுக்கான ஆடம்பரமான சூழ்நிலை இல்லை என்பதையும் அறிவார்கள். இதனால் அவர்களிடம் இருந்து எந்தவித அழுத்தமும் இல்லாமல் சிறந்த திறன் வெளிப்படக்கூடும்.
இது ஒருபுறம் இருக்க புதிய கேப்டனான ஷுப்மன் கில்லுக்கு இந்த தொடர் சவாலாக அமையக்கூடும். ஏனெனில் அணியை கட்டமைத்து அடுத்து கட்டத்துக்கு கொண்டு செல்ல வேண்டிய இடத்தில் ஷுப்மன் கில் உள்ளார். அவருக்கு ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் உறுதுணையாக இருக்கக்கூடும். 26 வயதான ஷுப்மன் கில் டெஸ்ட் கிரிக்கெட்டில், கேப்டனாகவும், பேட்ஸ்மேனாகவும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் அபாரமான செயல் திறனை வெளிப்படுத்தியிருந்தார். தற்போது அவரது ஒருநாள் போட்டி கேப்டன்ஷிப்பும் வெளிநாட்டிலேயே தொடங்குகிறது. ரோஹித் சர்மா, ஒருநாள் போட்டியின் கேப்டனாக இந்திய அணியில் உயர்ந்த தரநிலையை உருவாக்கியிருந்தார்.
அவரது தலைமையின் கீழ் இந்திய அணி 75 சதவீத வெற்றிகளை குவித்திருந்தது. இதேபோன்ற செயல்திறனை வெளிப்படுத்துவதில் ஷுப்மன் கில் முனைப்பு காட்டக்கூடும். ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் கேப்டனாகவும், பேட்ஸ்மேனாகவும் ஷுப்மன் கில் சிறப்பாக செயல்பட முடிந்தால், அது ஒரு கேப்டனாக அவரது தன்னம்பிக்கையை மேலும் அதிகரிக்கும்.
பாட் கம்மின்ஸ் காயம் காரணமாக அவதிப்பட்டு வருவதால் ஆஸ்திரேலிய அணி மிட்செல் மார்ஷ் தலைமையில் களமிறங்குகிறது. பிரதான வேகப்பந்து வீச்சாளரான பாட் கம்மின்ஸ் இல்லாத போதிலும் மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட் வேகக்கூட்டணி இந்திய பேட்டிங் வரிசைக்கு அழுத்தம் கொடுக்கக்கூடும். பேட்டிங்கில் டிராவிஸ் ஹெட், கூப்பர் கானொலி, மார்னஷ் லபுஷேன், மேத்யூ ரென்ஷா ஆகியோர் பலம் சேர்க்கக்கூடும். டிராவிஸ் ஹெட், இந்திய பந்து வீச்சாளர்களுக்கு அழுத்தம் கொடுக்கக்கூடும்.
இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் தொடக்க வீரர்களாக ஷுப்மன் கில், ரோஹித் சர்மா களமிறங்கக்கூடும். இதைத் தொடர்ந்து விராட் கோலி, ஸ்ரேயஸ் ஐயர், கே.எல்.ராகுல் ஆகியோர் இடம் பெறுவார்கள். வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக நித்திஷ் குமார் ரெட்டியும், சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக அக்சர் படேலும் சேர்க்கப்படக்கூடும். பிரதான சுழற்பந்து வீச்சாளராக குல்தீப் யாதவ் களமிறங்கக்கூடும். வேகப்பந்து வீச்சாளர்களாக முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா அல்லது ஹர்ஷித் ராணா இடம் பெறக்கூடும்.