போக்குவரத்து படகு மூலம் பத்மா ஆற்றை கடப்பதற்காக 50 பேருடன் வந்த தனியார் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து ஆற்றுக்குள் கவிழ்ந்த காட்சிகள் பதைபதைக்க வைக்கின்றன. நீச்சல் தெரிந்தவர்கள் மட்டும் மூச்சை பிடித்துக் கொண்டு தப்பிப் பிழைத்துள்ளனர். விபத்துக்கான காரணம் என்ன? காணாமல் போனவர்களின் நிலை என்ன?
ரம்ஜான் பண்டிகையை ஒட்டி வங்கதேசத்தில் பெரு நகரங்களில் வேலை செய்தவர்கள், தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்றனர். குடும்பத்தினருடன் பண்டிகையைக் கொண்டாடி முடித்துவிட்டு ஏராளமானோர் சாலை மார்க்கமாக வேலை செய்யும் இடங்களுக்கு திரும்பினர்.
இந்த நிலையில் புதன்கிழமை அன்று குஷ்டியா மாவட்டத்தில் இருந்து தலைநகர் டாக்காவுக்கு பேருந்து ஒன்று சென்றது. 212 கிலோ மீட்டர் தொலைவிற்கு செல்லும் பயணத்தில், இடையே ராஜ்பாரி மாவட்டத்தில் உள்ள பத்மா ஆற்றை கடக்க வேண்டும். அந்தப் பகுதியில் உள்ள பத்மா ஆற்றைக் கடக்க 4 முதல் 8 கிலோ தூரம் பயணிக்க வேண்டும். அங்கு ஆற்றுப் பாலம் ஏதும் இல்லாததால் போக்குவரத்து படகு இயக்கப்படுகிறது.
எனவே, போக்குவரத்துப் படகு மூலம் பேருந்து மற்றும் சிறிய ரக வாகனங்கள் ஆற்றைக் கடந்து செல்லும். இந்த நிலையில் 50 பயணிகளுடன் சென்ற பேருந்து, மாலை 5.30 மணியளவில் தௌலத்தியாவில் உள்ள படகு முனையத்திற்கு வந்தது. அப்போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தறிக்கெட்டு ஓடியது. அந்தப் பகுதியில் தடுப்பு ஏதும் இல்லாததால் பேருந்து அப்படியே ஆற்றுக்குள் சரிந்து விழுந்தது. அதைக் கண்டு அங்கிருந்தவர்கள் பதறியடித்துக் கொண்டு ஓடி வந்தனர்.
இருந்தபோதும் மூழ்கும் பேருந்தை மீட்க முடியாமல் கையறுநிலையில் அதிர்ச்சியில் உறைந்து போயினர். பேருந்து முழுவதும் ஆற்றுக்குள் மூழ்கியதைப் பார்த்து வெளியே இருந்தவர்கள் கதறித் துடித்தனர். சில விநாடிகளில் ஒருவர் மட்டும் நீந்தி வெளியே வந்தார். நீச்சல் தெரிந்த 11 பேர் மட்டும் அடுத்தடுத்து நீந்தி வெளியே வந்தனர். அப்படியும் மேலே வர முடியாமல் தத்தளித்தவர்களை போக்குவரத்துப் படகில் இருந்தவர்கள் கயிறு, சீலை போன்றவற்றால் கைகொடுத்து காப்பாற்றினர். ஒரு சிலர் அருகில் உள்ள படகை பிடித்தபடி உயிருக்குப் போராடினர்.
தகவல் அறிந்து தீயணைப்புத்துறை, கடற்படை மற்றும் போலீசார் அடங்கிய மீட்புப் படையினர் விரைந்து வந்தனர். அவர்கள், ஆற்றில் உயிருக்குப் போராடிய ஒரு சிலரை பாதுகாப்பாக மீட்டனர். ஆனால், உடனடியாக பேருந்தை வெளியே கொண்டு வர முடியாததால் பெரும் அசம்பாவிதம் நிகழ்ந்தது. இந்த விபத்தில் சிக்கி 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
மேலும், விபத்து ஏற்படுவதற்கு என்ன காரணம்? என்று தொடர்ந்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. விபத்தில் குழந்தைகள், பெண்களுடன் குடும்பம் குடும்பமாக சிலர் பயணித்துள்ளனர். இதனால், ஒரு சிலர் குடும்பத்தினருடன் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
